/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தான மின்கம்பங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
/
ஆபத்தான மின்கம்பங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஜூலை 09, 2025 11:01 PM

திருப்பூர்; கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியின், 58 வது வார்டுக்கு உட்பட்டது கே.செட்டிபாளையம் ஆதி திராவிடர் காலனி. அப்பகுதியில் நுாற்றுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மின்கம்பங்கள் அதிகம் சேதமாகி காணப்படுவதால், போர்க்கால அடிப்படையில், மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மின்கம்பங்கள் நீண்ட நாட்களாகிவிட்டதால், சேதமாகியுள்ளன; கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது; கம்பத்தின் அடிப்பாகம் சேதமாகியுள்ளது; அதிக அளவு மின் இணைப்புகள் இருப்பதால், மின்தடை ஏற்படும் போது கம்பத்தில் ஏறி பார்க்க, மின் ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
காற்று மற்றும் மழை காலம் துவங்க இருப்பதால், வலுவில்லாத மின்கம்பங்கள் விரைவில் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக பழுதான மின்கம்பங்களை மாற்றி அமைக்க முன்வர வேண்டும்,' என்றனர்.