/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒளி'யின்றி தவிக்கும் 'தீபம்' பாலம்!
/
'ஒளி'யின்றி தவிக்கும் 'தீபம்' பாலம்!
ADDED : செப் 23, 2024 11:36 PM

திருப்பூர்: தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நொய்யல் ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள 'தீபம்' பாலம், பல ஆண்டுகளாக தெரு விளக்கு பொருத்தாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
திருப்பூர், மங்கலம் ரோட்டை பாரப்பாளையம் பகுதியில் இணைக்கும் வகையில், ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியிலிருந்து, நொய்யல் ஆற்றின் குறுக்கில் உயர் மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு 50 சதவீத நிதியுடன் 3.25 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 2020ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்பு சேகரிக்கும் வகையில் 'தீபம்' அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பு துவங்கப்பட்டது. இதையடுத்து இந்த பாலம் தீபம் பாலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் நகரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் வகையில், எளிதாகவும், வசதியாகவும் வாகனங்கள், பொதுமக்கள் இந்த பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த பாலம் மற்றும் அணுகு சாலையில் தெரு விளக்கு அமைக்கப்படவில்லை.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அப்பகுதியினர் கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால், பாலம் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாலை நேரத்துக்குப் பின்னர் இப்பகுதியை கல்லுாரி மாணவியர், பெண்கள் கடந்து செல்வதில் அச்சம் நிலவுகிறது.
எனவே, தீபம் பாலத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

