/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணியில் ஒழுங்கீனம்; ஆயுதப்படைக்கு மாற்றம்
/
பணியில் ஒழுங்கீனம்; ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : அக் 30, 2024 06:48 AM
திருப்பூர் : திருப்பூரில், பொதுமக்களின் புகார் மனுக்கள் தொடர்பாக விசாரிக்காமல், பணியில் ஒழுங்கீனமாக இருந்ததால், மூன்று பேரை ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் அளிக்க கூடிய புகார் மனுக்கள் தொடர்பாக முறையாக விசாரிக்காமல், அலைக்கழிக்கப்படுவதாக கமிஷனருக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடந்தது. இதனை கையாள வேண்டிய எஸ்.ஐ., கார்த்திக் மற்றும் மக்களை வரவேற்று மனுவை பெற வேண்டிய ஏட்டு சின்னசாமி, போலீஸ்காரர் மாதேஸ்வரன் பணியில் அலட்சியமாக, ஒழுங்கீனமாக இருந்தது தெரிந்தது.
இதனால், எஸ்.ஐ., உட்பட, மூன்று பேரையும் மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். தொடர்ந்து, இதுபோன்ற விஷயங்களை கண்காணித்து கமிஷனர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த தவறிய நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் நாகேந்திரன், திருமுருகன்பூண்டி ஸ்டேஷன் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் இல்லாத நேரத்தில், பொதுமக்கள் கொண்டு வந்து தரக்கூடிய புகார் மனுக்கள் உள்ளிட்டவை விசாரிக்க வேண்டிய எஸ்.ஐ., கார்த்திக் மற்றும் மனுவை பெற வேண்டிய மற்ற, இரு போலீஸ்காரர்கள் பணியில் அலட்சியமாக இருந்தனர். இதுதொடர்பாக தொடர்ச்சியான புகார் சென்றதால், மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு கமிஷனர் இடமாற்றினார். ஸ்டேஷனில் நடக்க கூடிய இந்த பிரச்னையை ஏன் முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என்ற அடிப்படையில், ஐ.எஸ்., போலீஸ்காரரையும் மாற்றினார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

