ADDED : ஜூலை 14, 2026 07:39 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான கலை போட்டிகள், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள கருமாரம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடன போட்டிகள் நடத்தப்படும். 5 - 8 வயது, 9 - 12, 13 -- 16 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 9 - 12 மற்றும் 13 - 16 வயது பிரிவுகளில், முதலிடம் பிடிப்போர், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
கடந்தாண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள், இந்தாண்டுக்கான போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. திரைப்பட பாடல்கள், மேற்கத்திய நடனம் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. பக்கவாத்தியங்கள் அல்லது சிடி முதலானவற்றை மாணவர்களே கொண்டு வர வேண்டும்.
நடனம் ஆடுவதற்கு அதிகபட்சம் ஐந்து நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்களில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவிய போட்டியில் பங்கேற்போர், வண்ணங்கள், துாரிகை முதலான பொருட்களை கொண்டு வர வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், ஆதார் கார்டு நகல், வயது சான்றிதழ் மற்றும் பள்ளி படிப்பு சான்றிதழ் கொண்டுவந்து, 19ம் தேதி, காலை, 9:00 மணிக்குள் பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை, 96779 65555 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
