ADDED : ஆக 22, 2024 12:24 AM
திருப்பூர் : ''சாதகமான சூழல் நிலவுவதால், தீபாவளி ஆர்டர்கள், திருப்பூருக்கு தித்திப்பான வாய்ப்புகளை வழங்கும்'' என, தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
திருப்பூருக்கு, தீபாவளி பெரும் வர்த்தக வாய்ப்பை வாரிக்கொடுக்கும் பண்டிகை. வடமாநில வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், தீபாவளி பண்டிகைகால ஆர்டர்களுடன் திருப்பூர் வருவது வழக்கம். ஆவணி மாதத்தில் வியாபாரிகள் வருகை அதிகமாக இருக்கும். ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றால், அடுத்த ஒன்றரை மாதங்களில், உள்ளாடைகளும், பின்னலாடைகளும் வடமாநிலங்களுக்கு பார்சலில் அனுப்பி வைக்கப்படும்.
அதற்கான பண பரிவர்த்தனை முடிந்த பிறகுதான், தொழிலாளர்களுக்கான போனஸ் பட்டுவாடாவே துவங்கும். தீபாவளி ஆர்டர்களை எதிர்பார்த்தும், வர்த்தக விசாரணை நடத்தவும் தொழில்துறையினர் தயாராகிவிட்டனர்.
மூலப்பொருள் விலையேற்றம், எதிர்பாராத உற்பத்தி செலவு உயர்வு என, பெரிய பாதிப்புகள் இல்லாமல், இந்தாண்டு தீபாவளி ஆர்டரை பெறுவது, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''ஆடைகள் விலையை உயர்த்தாமல் இருப்பதால், இந்தாண்டு தீபாவளி உண்மையாகவே களைகட்டப்போகிறது'' என்கின்றனர் தொழில்துறையினர்.