ADDED : ஏப் 07, 2026 11:14 PM
பல்லடம்:பல்லடம் அருகே, தி.மு.க., சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும், அதில், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
தொடர்ந்து, 2 நாள் முன் நடந்த தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு விழாவின் போது, அனுமதியின்றி, ரோட்டில் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டதாக மற்றொரு வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம், பல்லடம் - திருப்பூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், அனுமதியின்றி பட்டாசு வெடித்தது மற்றும் பங்கேற்றவர்களுக்கு பனியன் (டி-சர்ட்) வழங்கியது ஆகிய காரணங்களுக்காக, தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு, கடந்த, 10 நாளில் மட்டும், தொடர்ந்து மூன்று வழக்குகள் தி.மு.க., மீது பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
