/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணம் வீசுமா கொத்தமல்லி விலை? விளைச்சல் சரிவால் விவசாயிகள் கவலை
/
மணம் வீசுமா கொத்தமல்லி விலை? விளைச்சல் சரிவால் விவசாயிகள் கவலை
மணம் வீசுமா கொத்தமல்லி விலை? விளைச்சல் சரிவால் விவசாயிகள் கவலை
மணம் வீசுமா கொத்தமல்லி விலை? விளைச்சல் சரிவால் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 29, 2024 11:26 PM
உடுமலை;பல்வேறு காரணங்களால், கொத்தமல்லி சாகுபடியில், விளைச்சல் குறையும் நிலை உள்ளதால், விலை சரிவை தடுக்க அரசு உதவ வேண்டும் என, மானாவாரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், அந்தியூர், கணபதிபாளையம், பொட்டையம்பாளையம், விருகல்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கொத்தமல்லி பிரத்யேகமாக மானாவாரியாக சாகுபடியாகிறது.
வழக்கமாக, உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தழை தேவைக்காக இல்லாமல், கொத்தமல்லி தானியத்துக்காக இச்சாகுபடியில், ஈடுபடுகின்றனர். விதைப்பு செய்த, 90-110 நாட்களில், கொத்தமல்லி தானியம் அறுவடைக்கு தயாராகிறது.
மானாவாரி சாகுபடி முறையில், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாமல், மழை மற்றும் பனியின் ஈரப்பதத்தில், செடிகள் வளர்கிறது. வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை.
இதனால், விதைப்பு தாமதம் ஏற்பட்டது; விதைப்புக்கு ஏற்ப செடிகளும் முளைக்கவில்லை. வளர்ச்சி தருணத்தில், மழை பெய்யாமல், பூ விடும் தருணத்தில் பெய்ததால், செடிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், பூ கருகுதல், உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது.
விவசாயிகள் கூறியதாவது: பருவநிலை மாற்றம் காரணமாக, மானாவாரி சாகுபடியில், எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பதில்லை. இந்தாண்டு கொத்தமல்லி சாகுபடியில், களைக்கொல்லி தெளித்தல், வளர்ச்சிக்கான மருந்து மற்றும் செம்பான் நோயை தவிர்க்க மருந்து வீசுதல் என கூடுதலாக செலவாகியுள்ளது.
வழக்கமாக ஏக்கருக்கு, 400 கிலோவுக்கும் அதிகமாக விளைச்சல் இருக்கும். இந்தாண்டு, அந்தளவு விளைச்சல் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, அறுவடை துவங்கியதும், விலை சரிவு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.