/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோமாரி தடுப்பூசி; தயக்கம் கூடாது
/
கோமாரி தடுப்பூசி; தயக்கம் கூடாது
ADDED : ஜூலை 27, 2025 11:36 PM
திருப்பூர்; 'கால்நடைகளுக்கு தயக்கமின்றி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தவேண்டும்,' என, வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கடந்த 25 ம் தேதி நடைபெற்றது. முன்னதாக நடந்த கருத்தரங்கில், கோமாரி நோய் குறித்து, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுமித்ரா பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. கால்நடை வளர்ப்பாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சில காரணங்களால், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர்.
சினை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால், கருச்சிதைவோ வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது. கன்று ஈனும் நிலையில் உள்ள மாடுகளுக்கு, அதிர்ச்சிக்கு உள்ளாக்காமல், தடுப்பூசி செலுத்தினால், பாதிப்பு ஏற்படாது.
மூன்று மாதத்துக்கு கீழ் உள்ள கன்றுக்குட்டிகளுக்கு, தடுப்பூசி போடவேண்டாம்; மூன்று மாதத்தை கடந்த கன்றுக்குட்டிகளுக்கு, தடுப்பூசி செலுத்தலாம்.
கோமாரி தாக்கிய பசுவின் பாலை குடிக்கும் கன்றுக்கும், இதய தசைகள் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிடும். ஆகவே, கோமாரியால் பாதித்த பசுவின் பாலை, கட்டாயம் கன்றுக்கு கொடுக்க கூடாது.
இவ்வாறு, அவர் பேசினார்.