/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.எல்.ஏ. போராட்டத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி; குப்பை அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
/
எம்.எல்.ஏ. போராட்டத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி; குப்பை அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
எம்.எல்.ஏ. போராட்டத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி; குப்பை அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
எம்.எல்.ஏ. போராட்டத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி; குப்பை அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
UPDATED : ஜன 06, 2026 07:46 AM
ADDED : ஜன 06, 2026 06:01 AM

திருப்பூர்: திருப்பூரில், நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பை மலையில், துர்நாற்றம் வீசியதால், ஆவேசமடைந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார். இதனால், குப்பை உடனடியாக அகற்றப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பையை அகற்றுவதில், பல மாதங்களாக பெரும் சிக்கல் நிலவுகிறது. இதற்கு முன், சுற்றுப்பகுதி பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்பட்டது. இதற்கு, விவசாயிகள், கிராம பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், குப்பைகள் வெளியே கொண்டு செல்ல வழியின்றி, நகரப்பகுதிக்குள் தேங்கிக் கிடக்கிறது.
இவ்வாறு வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் ஆங்காங்கே கிடைக்கும், காலியிடங்களில் கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2 மாதத்துக்கும் மேற்பட்ட குப்பை கழிவுகள் தேங்கி பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது.
அவ்வகையில், 52 மற்றும் 55 வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவு, வெள்ளியங்காடு, முத்தையன் கோவில் பகுதியில் குவிக்கப்பட்டுக் கிடக்கிறது.
இதேபோல், சங்கிலிப்பள்ளம் ஓடையின் மீது கட்டியுள்ள பாலம் மற்றும் அதன் அருகே, ஓடைக்கரை மற்றும் பிரதான ரோட்டின் ஓரத்திலும் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால், குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், சுற்றுப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
'3 நாள் குப்பை தான்' இதையறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) செல்வராஜ் தன் ஆதரவாளர்களுடன், நேற்று காலை அப்பகுதிக்கு சென்று 'தர்ணா'வில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சென்ற மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி எம்.எல்.ஏ.வுடன் பேச்சு நடத்தினர். 'மூன்று நாள் குப்பை தான்,' என அதிகாரிகள் கூற, ஆவேசமடைந்த செல்வராஜ், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணனை கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு குப்பை தேங்கிக் கிடந்த பகுதிக்குள் சென்றார்.
குப்பைக்குள் நடந்து சென்று, 'இது மூன்று நாள் குப்பையா? ஏன் இப்படி பேசுகிறீர்கள். இப்பவே, முழுவதும் அகற்ற வேண்டும். அது வரை நான் தண்ணீர் கூட குடிக்காமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன். நாளை முதல் தினமும் ஒரு பகுதிக்குச் சென்று அமர்ந்து கொண்டு குப்பையை அகற்ற போராட்டம் நடத்துவேன்' என்று ஆவேசமாக பேசினார்.
என்ன செய்வதென்று கையை பிசைந்து நின்ற அதிகாரிகள், கமிஷனரிடம் ஆலோசித்தனர். அதனை தொடர்ந்து, துாய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, குப்பையை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த தினேஷ்குமார் உள்ள நிலையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வே குப்பை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது, திருப்பூரில், பரபரப்பை ஏற்படுத்தியது.

