/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செறிவூட்டப்பட்ட அரிசியை வீணாக்காதீர்!
/
செறிவூட்டப்பட்ட அரிசியை வீணாக்காதீர்!
ADDED : பிப் 13, 2026 05:00 AM

திருப்பூர்: 'பிளாஸ்டிக் அரிசி என தவறாக நினைத்து, சத்துக்கள் நிறைந்த செறிவூட்டப்டட்ட அரிசியை வீணாக்கிவிடக்கூடாது' என, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சேலம் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நிறைவுநாளான நேற்று, இரண்டு பிரிவகளாக, அங்கன்வாடி பணியாளர் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
குழந்தை வளர்ப்பு, மன அழுத்தத்தை போக்குவது, முதலுதவி, யோகா, உணவு பாதுகாப்பு, தீ தடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின்பிரபு பேசியதாவது:
அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், உணவு தயாரிக்கும் இடங்களை துாய்மையாக வைத்திருக்கவேண்டும். உணவு தயாரிப்பின்போதும், பரிமாறும்போதும், சுய சுகாதாரம் கடைபிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு உணவுப்பொருளிலும், வெவ்வேறுவகைகளில் கலப்படங்கள் செய்யப்படுகின்றன; உணவுப்பொருள் கலப்படம் குறித்து நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டியது அனைவரின் கடமையாகிறது.
இரும்புச்சத்து, வைட்டமின் பி12, போலிக் ஆசிட் ஆகியவை கலக்கப்பட்டதுதான், செறிவூட்டப்பட்ட அரிசி. மதிய உணவு திட்டம், அங்கன்வாடிகளில் உணவு சமைப்பதற்கும், பொதுவினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளிலும் அரசு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குகிறது.
உலக சுகாதார அமைப்பின் சர்வே படி, இரும்புச்சத்து குறைபாடு அதிகரித்திருப்பது தெரியவருகிறது. இதை சரிசெய்வதற்காகவே, அரசு, செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குகிறது. அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் மட்டுமின்றி, ரேஷனின் பொருள் வாங்கும் பொதுமக்களும், செறிவூட்டப்பட்ட அரிசியை சமைக்காமல், வெளியேற்றிவிடக்கூடாது.
இவ்வாறு, அவர் பேசினார்.
---
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற அங்கன்வாடிப்பணியாளர்கள்.

