
''பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக தீக்காயம் எதுவும் ஏற்பட்டால் பதட்டமின்றி செயல்பட வேண்டும்'' என, மருத்துவர் தரணிகா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தீ பிடித்த அல்லது தீ பிடிக்கவுள்ள நிலையில் உள்ள இடங்களிலிருந்து முதலில் விலகி நகர்ந்து விட வேண்டும். பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகளின் போது, தளர்வான பருத்தி போன்ற ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. எதிர்பாராதவிதமாக கைகளில் தீக்காயம் ஏற்பட்டால், மோதிரம், வளையல் போன்ற அணிகலன்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.
குளிர்ச்சியான நீரால் அந்த இடத்தை சுத்தம் செய்து காயத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். லேசான மேல் காயம் என்றால் அச்சப்பட வேண்டியதில்லை. ஆன்டிபயாடிக் கிரீம் அல்லது மாய்ஸரைசர் போன்ற ஒன்றை அப்ளை செய்தால் போதும். சற்று அதிகமாக கொப்பளம் ஏற்படும் வகையிலான பெரிய காயம் என்றாலும், சதை வரை ஆழமான காயம் ஏற்பட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
காயத்தின் மீது பச்சிலை போடுவது, மஞ்சள், காபி பொடி துாவுவது போன்ற எதுவும் செய்ய வேண்டாம். இதனால், மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். மருத்துவரை அணுகும் போது அவர் பரிசோதித்து, தீக்காயத்தின் தன்மைக்கேற்ப மருந்து மற்றும் ஊசியை மருத்துவர் பரிந்துரைப்பார்.