/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர்கள் ஸ்டிரைக்; துாய்மைப்பணி தொய்வு
/
டிரைவர்கள் ஸ்டிரைக்; துாய்மைப்பணி தொய்வு
ADDED : அக் 10, 2025 12:49 AM

திருப்பூர்; மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணி வாகன டிரைவர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆட்டோ, லாரி, டம்பர் பிளேசர், ராட்சத தொட்டி வாகனம் ஆகிய குப்பை அகற்றும் பணியில் உள்ள வாகனங்களை இயக்குவதற்கு டிரைவர்கள் உள்ளனர். நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட ஊழியர்கள், ஆலங்காடு மாட்டுக் கொட்டகை வளாகம் பகுதியிலிருந்து செயல்படுகின்றனர்.
நேற்று காலை துாய்மைப் பணியில் குப்பை சேகரித்தல், பேட்டரி வாகன ஓட்டுவோர் உள்ளிட்ட ஊழியர்கள் வந்து தங்கள் பணியை வழக்கம் போல் துவங்கினர்.
இவர்களில் வாகன டிரைவர்கள் 50 பேர் தங்கள் வாகனங்களை இயக்க மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு மாதமாக சம்பளம் வரவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சம்பளம் இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஒப்பந்த நிறுவன அலுவலர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர். உடனடியாக சம்பளம் வழங்கப்பட வேண்டும்; எப்போது வழங்கப்படும் என்று உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
தீபாவளிக்கு முன்பே வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டாலும், தேதியை தெரிவிக்க வேண்டும் என்று கோரி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் காரணமாக 4வது மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளில் துாய்மைப் பணியில் குப்பைகள் அகற்றுவதில் சற்று தேக்கம் காணப்பட்டது.