/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டூயிங் டியூட்டி' போலீசாருக்கு டி.எஸ்.பி., போட்ட 'கிடுக்குப்பிடி'
/
'டூயிங் டியூட்டி' போலீசாருக்கு டி.எஸ்.பி., போட்ட 'கிடுக்குப்பிடி'
'டூயிங் டியூட்டி' போலீசாருக்கு டி.எஸ்.பி., போட்ட 'கிடுக்குப்பிடி'
'டூயிங் டியூட்டி' போலீசாருக்கு டி.எஸ்.பி., போட்ட 'கிடுக்குப்பிடி'
ADDED : நவ 21, 2024 11:32 PM
திருப்பூர்; காங்கயம் சப்-டிவிஷனில் 'டூயிங் டியூட்டி' என்ற பெயரில் ஸ்டேஷனில் நங்கூரமாக அமர்ந்துள்ள போலீசாரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டேஷன்களுக்கு செல்ல காங்கயம் டி.எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
காங்கயம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில், காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி என, நான்கு சட்டம்-ஒழுங்கு ஸ்டேஷன், தலா ஒரு மகளிர், போக்குவரத்து ஸ்டேஷன் உள்ளது.
சமீபத்தில், காங்கயத்தை சேர்ந்த ஒருவர், உறவினர் மீது வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதிப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள ஸ்டேஷனுக்கு சென்றார்.
இதுதொடர்பாக பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்து கொண்டிருந்தார். அங்கு இருந்த போலீஸ்காரர் கருணாகரன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டி, மொபைல் போனை உடைக்க முயன்றார். இதுகுறித்து அந்நபர் டி.எஸ்.பி., மாயவனிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக டி.எஸ்.பி., விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் 'டூயிங் டியூட்டி' (அயல் பணி - போக்குவரத்து) என்ற பெயரில் அங்கு இருந்தது தெரிந்தது.
டூயிங் டியூட்டி என்ற பெயரில் சப்-டிவிஷனில் நீண்ட காலமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டேஷன்களுக்கு செல்லாமல் பழைய இடங்களிலே உள்ள போலீசார் குறித்து விசாரித்தார்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தலா, நான்கைந்து பேர் வீதம், 20 முதல், 25 போலீசார் இருப்பது தெரிந்தது. உடனே, சம்பந்தப்பட்ட போலீசார் இன்று (22ம் தேதி) அந்தந்த ஸ்டேஷன்களுக்கு திரும்ப செல்ல வேண்டும் என்று டி.எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், டி.எஸ்.பி.,யின் உத்தரவை சிலர் கண்டுகொள்ளாமல், தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அதே இடத்தில் நீடிக்க காய் நகர்த்தி வருவதாக, சக போலீசாரே குற்றம்சாட்டி உள்ளனர்.