ADDED : ஜூன் 01, 2025 11:31 PM

உடுமலை : உடுமலை பகுதியில், முன்னதாகவே துவங்கிய பருவமழையால், சின்னவெங்காய அறுவடை பணிகள் பாதித்துள்ளது; இருப்பு வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, நேரடி மற்றும் நாற்று முறையில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது.
வளர்ச்சி தருணத்தில், அதிக வெயிலால் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், அறுவடை தருணத்தில், முன்னதாகவே தென்மேற்கு பருவமழையால், பணிகள் தாமதித்தது; இருப்பு வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடிக்கு, விதை, நாற்று, மருந்து, உரம் என இடுபொருட்கள் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில், அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல், மழை துவங்கியது.
அறுவடை தாமதம் காரணமாக, சின்னவெங்காயத்தை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, கிலோவுக்கு 40 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.