ADDED : ஆக 29, 2025 09:40 PM
- நமது நிருபர் -
''திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேரும், 3,400 மாணவர்களுக்கு வங்கி வாயிலாக, 90 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில்,திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கல்லுாரி முதல்வர்கள், கல்லுாரி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் பங்கேற்ற, கல்விக்கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேரும், 3,400 மாணவர்களுக்கு வங்கி வாயிலாக, 90 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் டிச., 31ம் தேதி வரை, நான்கு கல்விக்கடன் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ஆவணங்கள் சரிபார்த்து, கல்விக்கடன் வழங்கப்படும்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களும் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அரசின் வித்யாலட்சுமி இணைய தளத்தில் பதிவு செய்து, எளிதாக வங்கிக்கடன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண், 17ல் உள்ள கல்விக்கடன் உதவி மையத்தை அணுகலாம்; 0421 - 2971185 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.