ADDED : அக் 07, 2024 01:07 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன; மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 25 வாக்காளர் உள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ், வரும் 29 ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிடுகிறார். வரைவு பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளலாம். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் படிவங்கள் பெற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுச்சாவடிகளுக்கு செல்லாமலேயே, https://voters.eci.gov.in என்கிற இணையதளம் வாயிலாகவும், Voter Helpline மொபைல் செயலி மூலமாகவும் இருப்பிடத்திலேயே, ஆன்லைனிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர் அனைவரும், பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தவறாமல் விண்ணப்பிக்கவேண்டும்.
நான்கு நாட்கள் சிறப்பு முகாம்: தொழிலாளர்கள், பொதுமக்கள் வசதிக்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் நவம்பர் மாதம் நான்கு விடுமுறை நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாம் நாட்களில், அருகாமையிலுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு நேரில் சென்று, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
சுருக்கமுறை திருத்தத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

