/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆங்கிலப் புத்தாண்டு; தொழில், கல்வி சிறக்கட்டும்'
/
'ஆங்கிலப் புத்தாண்டு; தொழில், கல்வி சிறக்கட்டும்'
ADDED : ஜன 01, 2024 12:13 AM

திருப்பூர்;'ஆங்கிலப் புத்தாண்டில், போர் சூழல் மறைந்து உலகம் முழுவதும் அமைதி நிலவி, மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்'' என, ஆன்மிக பெரியோர் அருளாசி வழங்கியுள்ளனர்.
ஆரோக்கியம் மேம்படட்டும்
சிவலிங்கேஸ்வரர், காமாட்சிபுரி ஆதீனம்: 'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத் தனைய துயர்வு' என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, மக்களின் வாழ்க்கையின் உயர்வு அவர்களின் ஊக்கத்தை பொறுத்து அமையும். மனித நேயமும், மக்கள் நற்சிந்தனையும் பெற்று ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக மனிதர்கள் மாற வேண்டும். கடந்த, 2023ம் ஆண்டு, இயற்கை சீற்றம் ஒருபுறம், மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் மற்றும் அரசின் நிலை ஆகியவை மற்றொருபுறம் என, மக்களை அச்சுறுத்தின.
கடந்த கால இன்னல்களில் இருந்து விடுபட்டு, ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் மிக சிறப்பானதாக அமையட்டும். அவரவர் செய்கின்ற தொழில், வியாபாரம், வேலை, கல்வி உள்ளிட்டவை சிறந்து விளங்கட்டும். கோவில்களில், வழிபாடுகள் தடையின்றி சிறப்பாக நடக்க வேண்டும். மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், இறைவன் அருள் புரியட்டும்.
காரியங்கள் வெல்லட்டும்
ஸ்ரீநடராஜ சுவாமிகள், கூனம்பட்டி திருமடம்: இன்று 2024ம் ஆண்டு பிறக்கிறது; ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடித்து வைக்கும் நாம் அனைவரும் நலமுடன், சிறப்பாக வாழ வேண்டும்; எடுத்த காரியம் வெற்றிபெற வேண்டும். ஆன்மிகம், அரசியல், விவசாயம், தொழில்கள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும்; மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டுமென, இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். தீய குணங்களை அகற்றி, நல்ல பண்புகளுடன் வெற்றிகரமாகவும், நலமுடன் வாழவும் இறையருளை பிரார்த்திக்கிறோம்.
அமைதி நிலவட்டும்
சுந்தரராஜ அடிகளார், திருமுருகநாத சுவாமி திருமடம்: ஆங்கில புத்தாண்டு சிறப்பானதாகவும், இனிமையானதாகவும் இருக்கட்டும்; இயற்கை பேரிடர், போர் போன்ற துயரங்கள் மறைந்து, மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று, வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம். திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் மீண்டும் வளர்ச்சி பெற வேண்டும். உலகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்க வேண்டும்; உலக மக்கள் நோய் நொடியின்றி இனிதே வாழ வாழ்த்துகள்.
அன்பு தழைக்கட்டும்
அசோக்குமார், பாஸ்டர், டி.இ.எல்.சி., சர்ச், திருப்பூர்: ஆங்கில புத்தாண்டில் இருந்து, அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம். சமத்துவம், சகோதரத்துவம், சமரசத்துடன், ஒருவரை ஒருவர் நேசித்து, அன்பு செய்து வாழ வேண்டும்; இயற்கை பேரிடர் இல்லாத, அமைதியான, ஆனந்தமான உலகம் இயங்க வேண்டும்; இறைவன் அனைவரையும் ஆசிர்வதிக்க வேண்டும்.
கருணை பெருகட்டும்
டாக்டர் நசீர்தீன், தலைவர், தக்வா மஸ்ஜித், அமர்ஜோதி கார்டன், திருப்பூர்: உலக மக்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அனைத்து நிலையிலும் ஆங்கில தேதியை பின்பற்றுகிறோம். மதங்களை கடந்த அன்பு, கருணையுடன் அமைதியாக வாழ வேண்டும். அனைத்து நாட்டு மக்களும், புத்தாண்டில் இருந்து அன்பு பாராட்டி, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். உலகம் முழுவதும், அன்பு, கருணை, இரக்கம் நிறைந்து வாழ வேண்டும்.