/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒவ்வொரு வீடும் சுதேசியாக மாற வேண்டும்
/
ஒவ்வொரு வீடும் சுதேசியாக மாற வேண்டும்
ADDED : ஜன 22, 2026 05:12 AM

திருப்பூர்: சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பில், மாணவர்களுக்கான வழிகாட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர், வாலிபாளையம் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜா சண் முகம் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் ஆடிட்டர் தனஞ்செயன் வரவேற்றார்.
செங்குந்த மகாஜன சங்க மாநில தலைவர் செல்வராஜ் வாழ்த்துரையாற்றினார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், சுதேசி விழிப்புணர்வின் அவசியம் குறித்து விளக்கினார்.
நிப்ட்--டீ கல்லுாரி வணிகவியல் மேலாண்மைத்துறை மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் சுதேசிப் பொருட் களைப் பயன்படுத்துவோம், என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பாளர் தீபக் சர்மா பேசியதாவது:
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை, 145 கோடியாகவும், அமெரிக்காவில், 35 கோடியாகவும் மட்டுமே உள்ளது.
ஆனால், அதிக தொழில் முனைவோர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்தியா, அதில் பின் தங்கியுள்ளது. நாட்டில், இன்றைய நிலவரப்படி மொத்த வேலை வாய்ப்பு எண்ணிக்கை, 3 கோடியே 8 லட்சம்.
குறிப்பாக, 15 வயது முதல், 25 வயதுள்ள இளைஞர்கள் எண்ணிக்கை, 35 கோடி. இது பத்து மடங்கு அதிகம்.
இன்னும் பகுப்பாய்வு செய்தால், 300 பேருக்கு ஒருவர் பணியமர்த்தப்படுகிறார்.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் பலர் வேலைகளை இழக்கும் சூழ்நிலையும், 500 பேருக்கு ஒருவர் பணியில் சேர்வதுமாக அமைந்துவிடும்.
இன்றைய இளைஞர்களின் சிந்தனையில் யாரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், அனைவருக்கும் வேலை கொடுக்கும் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும். இதுபற்றியே, சிந்திக்க வேண்டும்.
சிறு, குறு தொழில்களும், உள்நாட்டு பொருட்கள் தயாரிப்பு வளர்ச்சி மட்டுமின்றி, உள்ளூர் பொருட்களையும், உணவு உற்பத்தியை சந்தைப்படுத்துவதிலும், தனி கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய மகளிர் ஆடை, கைவினை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஆடைகளை தயாரிப்பதில் முன் வர வேண்டும். அடுத்ததாக பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இன்றைய இளைஞர்கள் தங்கள் பகுதியைச் சுற்றிலும் உள்ள பால் சேகரிப்பு மையங்களைக் கண்டறிந்து, நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று, சுகாதாரமாக பதப்படுத்தி, பால் சார்ந்த உணவுப்பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும்.
இதனை நன்கு அறிந்த அமெரிக்கா தனது நாட்டிலும் ஆடை மற்றும் பால் சார்ந்த சந்தைகளை ஏற்படுத்த நம் பிரதமரிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், அவர் மறுத்ததால் இந்தியாவின் மீது கூடுதல் வரிகளை விதித்தது அமெரிக்கா. நம் நாட்டின் பலம் இளைஞர்கள் மட்டுமே.
அதனால், ஒவ்வொரு வீடும் சுதேசி கொள்கையின்படியும், ஒவ்வொரு இளைஞரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல் அனைவருக்கும் வேலை கொடுப்பவர்களாக தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நம் நாட்டின் பலம் இளைஞர்கள் மட்டுமே. அதனால், ஒவ்வொரு வீடும் சுதேசி கொள்கையின்படியும், ஒவ்வொரு இளைஞரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல் அனைவருக்கும் வேலை கொடுப்பவர்களாக தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்

