ADDED : டிச 21, 2024 11:35 PM
திருப்பூர்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2023-24ம் நிதியாண்டின், ஏப்., - அக்., வரையிலான, ஏழு மாதங்களில், 'டாப் -10' நாடுகளுக்கு, 65 ஆயிரத்து, 662 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்., - அக்., வரையிலான காலகட்டத்தில், 73 ஆயிரத்து, 286 கோடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு மட்டும், இந்த காலகட்டத்தில், 24 ஆயிரத்து, 780 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது; இது, முந்தைய ஆண்டை காட்டிலும், 14 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,'கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு புதிய ஆர்டர் வரத்து அதிகரித்து வருகிறது. பசுமை சார் உற்பத்திக்கு மதிப்பளித்த, புதிய வர்த்தக நிறுவனங்கள் திருப்பூரை தேடி வந்து ஆர்டர் கொடுக்கின்றன,' என்றனர்.