/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
/
பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
ADDED : ஜூன் 28, 2025 11:52 PM
திருப்பூர்: ஆடை உற்பத்திக்கான பி.எல்.ஐ., திட்டம் பிரத்யேகமாக உருவாக்கப்படுமென மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதால், திருப்பூர் தொழில்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்ச மானியம் வழங்கும் பி.எல்.ஐ., எனப்படும், உற்பத்தி சார் ஊக்குவிப்பு மானிய திட்டம், 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில், 14 துறைகளுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த ஜவுளிப்பிரிவில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மட்டுமே இடம்பெற்றது.
குறிப்பாக, 100 கோடி ரூபாய் முதலீடு செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளில், 300 கோடி ரூபாய் 'டர்ன் ஓவர்' மற்றும் 300 கோடி ரூபாய் முதலீட்டில், அடுத்த மூன்று ஆண்டுகளில், 900 கோடி 'டர்ன் ஓவர்' என்ற வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், குறு, சிறு தொழில்களை புதுப்பிக்கவும், துவக்கவும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
'பி.எல்.ஐ., - 2.0' திட்டம் அறிவிப்போடு நின்றுவிட்டது. அத்திட்டத்தை சீரமைத்து, பருத்தி நுாலிழை ஆடை தொழிலும் இணைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ''ஆடை உற்பத்திக்கான, 'பி.எல்.ஐ.,' திட்டம் விரைவில் பிரத்யேகமாக அறிவிக்கப்படும்'' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
இத்தகைய அறிவிப்பு, கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த திருப்பூருக்கு, உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது. இருப்பினும், அதிகபட்ச நிபந்தனைகளை தளர்த்தி, குறு, சிறு தொழில்களும் திட்டத்தால் பயன்பெறும் வகையில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'பி.எல்.ஐ.,' திட்டம் அறிவிக்கப்பட்ட போது, பெரும் எதிர்பார்ப்புடன் திருப்பூர் பின்னலாடை துறையினர் காத்திருந்தனர். அப்போது, நுால் விலை உயர்வு, போர் சூழல், பணவீக்கம் என, களநிலவரம் சரிவர ஒத்துழைக்கவில்லை. ஆவலுடன் எதிர்பார்த்த பி.எல்.ஐ., திட்டம் புஸ்வாணமாக மாறிவிட்டதாக, தொழில்துறையினர் புலம்பினர். இந்நிலையில், புதிய அம்சங்களுடன் வரப்போகும் திட்டம், உண்மையாகவே பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.