/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலம் ஊராட்சி மீது விவசாயிகள் கொந்தளிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட அதிரடி திட்டம்
/
மங்கலம் ஊராட்சி மீது விவசாயிகள் கொந்தளிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட அதிரடி திட்டம்
மங்கலம் ஊராட்சி மீது விவசாயிகள் கொந்தளிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட அதிரடி திட்டம்
மங்கலம் ஊராட்சி மீது விவசாயிகள் கொந்தளிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட அதிரடி திட்டம்
ADDED : ஜூலை 29, 2025 11:35 PM

திருப்பூர்; திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, 15 வார்டுகளை கொண்டது. மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளதால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மூன்றாவது திட்ட குடிநீர் மட்டுமே, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது; கூடுதல் குடிநீர் திட்டத்தில் பெறப்படும் தண்ணீர் எங்கே செல்கிறது என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
துாய்மை காவலர்கள், வீடுவீடாக சேகரிக்கும் குப்பையை, காலியாக இருக்கும் இடங்களில் கொட்டுகின்றனர். அவ்வப்போது தீ வைத்தும் எரிக்கின்றனர். மங்கலம் நால்ரோடு சுற்றுப்பகுதியில் சேகரிக்கும் குப்பை, நொய்யல் கரையோரமாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபாளையம் குளத்துக்கு செல்லும் வாய்க்காலில், ஏகமாக பாலிதீன் குப்பைதான் மிதந்து கொண்டிருக்கின்றன. இதனால், ஆண்டிபாளையம் படகுக்குழாம் சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், நொய்யலை பாதுகாக்க, சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மங்கலம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, நொய்யல் கரையோரமாக குவித்து வைக்கப்படுகிறது.
குப்பை கொட்டும் இடத்தில், எவ்வித வேலி பாதுகாப்பு வசதியும் செய்யாமல், வெட்டவெளியில் குப்பை கொட்டுவதை, மங்கலம் ஊராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்படுமென, விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் கூறியதாவது:
மங்கலம் ஊராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல் குறித்து எவ்வித கவலையும் இல்லாமல், குப்பையை ஆற்றோரமாக கொட்டி வருகிறது.
நொய்யல் மாசுபடுவது குறித்து கவலைப்படாமல், மங்கலம் ஊராட்சி நிர்வாகம், பாலிதீன் குப்பை கலந்த குப்பையை ஆற்றோரமாக கொட்டி வைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாதபட்சத்தில், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நடவடிக்கை பாயும் இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் கேட்டபோது, ''திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில், நொய்யல் கரையோரம் குப்பை கொட்டுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

