/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புடலைக்கு விலை கிடைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
புடலைக்கு விலை கிடைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 20, 2024 10:17 PM
உடுமலை; புடலங்காய்க்கு தற்போதைய சீசனில், போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், உடுமலை ஆண்டியகவுண்டனுார், கொங்கல்நகரம், சின்னவீரம்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக பந்தல் காய்கறி சாகுபடி செய்கின்றனர்.
விளைநிலங்களில், நிரந்தர பந்தல் அமைத்து, ஆண்டு முழுவதும், பாகற்காய், புடலை, பீர்க்கன் உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கின்றனர். மழைக்காலத்தில் இச்சாகுபடியில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, விளைச்சல் குறையும். இந்தாண்டு பரவலாக புடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அறுவடை துவங்கியுள்ள நிலையில், தற்போது, உடுமலை உழவர் சந்தையில், புடலங்காய் கிலோவுக்கு, 22 - 27 ரூபாய் விலை கிடைக்கிறது. ஆனால், புடலங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு, புடலை கிலோவுக்கு, 40 ரூபாய் வரை விலை கிடைத்தது. தொடர் மழையால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில், நடப்பு சீசனில்,விலையும்சரிந்துள்ளது. விரைவில், சந்தைகளில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.