/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைக்கு முழு அளவு நீர்; விவசாயிகள் போராட்டம்
/
அணைக்கு முழு அளவு நீர்; விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜூலை 02, 2025 09:51 PM
- நமதுநிருபர் -
திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவான தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் கூறியதாவது:
உப்பாறு அணை நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறதது. இதனால், விவசாய நிலங்களும் வறட்சியின் பிடியில் உள்ளன. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன், உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., திட்டம் விரிவாக்கம் செய்த பின், நீரின் அளவு குறைந்தது.
மேலும், அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்கள் தடுப்பணை கட்டின. மழையும் பொய்த்ததால் நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால், இந்த அணையால் பயனடைந்த, பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.