/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுப்பிக்கப்பட்ட காண்டூர் கால்வாயில் ஓட்டை: பாசன நீர் வீணாவதால் விவசாயிகள் அதிர்ச்சி
/
புதுப்பிக்கப்பட்ட காண்டூர் கால்வாயில் ஓட்டை: பாசன நீர் வீணாவதால் விவசாயிகள் அதிர்ச்சி
புதுப்பிக்கப்பட்ட காண்டூர் கால்வாயில் ஓட்டை: பாசன நீர் வீணாவதால் விவசாயிகள் அதிர்ச்சி
புதுப்பிக்கப்பட்ட காண்டூர் கால்வாயில் ஓட்டை: பாசன நீர் வீணாவதால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : பிப் 18, 2024 02:23 AM

உடுமலை:பி.ஏ.பி., திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயின் புதுப்பிக்கப்பட்ட பகுதியில், ஓட்டை ஏற்பட்டு பாசன நீர் வீணாகிறது.
பி.ஏ.பி., திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து, 49.5 கி.மீ., நீளத்துக்கு முழுவதும் மலைப்பாதையில், சுரங்கங்கள் அமைத்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து, பாசனத்திற்கு பிரதான வினியோகம் செய்யப்படுகிறது.
காண்டூர் கால்வாய் பழமையானதாக உள்ளதால், நீர் விரயம் அதிகரித்து, பாசன பகுதிகளுக்கு உரிய நீர் கிடைக்காமல், பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கால்வாயை புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், 4 ஆண்டுக்கு முன், 157 கோடி ரூபாய் செலவிலும், விடுபட்ட பகுதிகள், தற்போது, 72 கோடி ரூபாய் செலவிலும், முழுவதும் கான்கிரீட் கால்வாயாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த, ஏப்., - மே மாதங்களில், 3 கி.மீ., துாரம் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இரு புறமும் கம்பிகள் கட்டி, கான்கிரீட் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பொன்னாலம்மன் சோலை பகுதியில், காண்டூர் கால்வாயின் 43.38வது கி.மீ.,ல், பாட்டையன் ெஷட் மதகு பகுதியில், ஓட்டை ஏற்பட்டு அதிகளவு நீர் வீணாகிறது.
புதுப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு கூட நிறைவடையாத பகுதியில், ஓட்டை ஏற்பட்டு நீர் வெளியேறுவது, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அவசர கால வெள்ள நீர் வெளியேற்ற அமைக்கப்பட்டிருந்த மதகு பகுதிகளில், நீர் திருட்டு அதிகரித்ததால், புதுப்பிக்கும் பணியின் போது, அவற்றை அதிகாரிகள் அடைத்தனர்.
தற்போது, முழுமையாக கான்கிரீட் அமைக்கப்பட்ட பகுதியில், விநாடிக்கு, 25 முதல், 50 கனஅடி நீர் வீணாவது திட்டப்பணிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்லது, யாராவது கால்வாயை சேதப்படுத்தியுள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஓட்டை பெரிதாகி, ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிப்பதற்கு முன் சரி செய்ய வேண்டும். தற்போது, முதல் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3 மாதங்களுக்கு நீர் வீணாவது தொடர்ந்தால், பாசனத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.
விவசாயிகள் கூறியதாவது:
காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பகுதியிலேயே, ஓட்டை அமைத்து நீர் திருடப்படுகிறதா அல்லது தரமில்லாத கட்டுமான பணி காரணமா என உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தற்போது சிறிய அளவிலான ஓட்டையை சரி செய்யாவிட்டால், ஒட்டுமொத்த கட்டுமானத்தையும் பாதிக்கும். அதற்கு முன் சரி செய்ய வேண்டும்.
அதே போல், சர்க்கார்பதியில், விநாடிக்கு, 1,038 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால், திருமூர்த்தி அணைக்கு, 800 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. எனவே, நீர்க்கசிவு மற்றும் திருட்டு ஆகியவற்றை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.