/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர் நீருக்காக விவசாயிகள் போராட்டம்
/
உயிர் நீருக்காக விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 13, 2024 01:18 AM

திருப்பூர்;பி.ஏ.பி., பாசனத்தில், உப்பாறு அணைக்கு உயிர் நீர் வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பாறு விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில், உப்பாறு பகுதி விவசாயிகள் சிலர், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர்.
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி, கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவக்குமார் கூறுகையில், ''அதிகாரிகளுடன் பத்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், தாராபுரம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மொபைல்போன் டவரில் ஏறி ஏழு மணி நேரம் போராட்டம் நடத்தியும் பயனில்லாததால், கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளோம். பி.ஏ.பி.,- ல் நீர் திருட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; இதுகுறித்து, திருப்பூருக்கு வந்த சட்டசபை மதிப்பீட்டுக்குழுவும் அதிருப்தி தெரிவித்துச் சென்றுள்ளது.
கடைமடை விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததற்கு, நீர் திருட்டும் முக்கிய காரணம். அரசூர் தடுப்பணையிலிருந்து, உப்பாறு அணைக்கு உயிர் நீர் திறக்கவேண்டும். இதற்கு ஒருதரப்பு விவசாயிகள் மறுக்கின்றனர். எனவே, இருதரப்பு விவசாயிகளை அழைத்து, கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். கலெக்டர் உறுதியளிக்கும்வரை, காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம்'' என்றார்.
மாலை வரை போராட்டம் தொடர்ந்தநிலையில், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், விவசாயிகளை அழைத்து, ''வரும் 23ம் தேதி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என்று உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.