ADDED : டிச 23, 2024 11:22 PM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
பாறைக் குழியில் குப்பை கொட்ட அனுமதிக்கக்கூடாது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு மாநில செயலாளர் சதீஷ் குமார், பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், குப்பைகளை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி சார்பில், பாறைக் குழியில் தொடர்ந்து, குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை சதீஷ் குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், ஆகியோர் குப்பை கொட்ட சென்ற லாரியை சிறை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரையும் பெருமாநல்லுார் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று குப்பை கொட்டவரும் லாரியை தடுக்கக்கூடாது என அறிவுறுத்தி விடுவித்தனர்.
அதனை தொடர்ந்து, சதீஷ்குமார், குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி பொங்குபாளையம் பாபுஜி நகர் விநாயகர் கோவில் அருகில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று இரவு முதல் ஈடுபட்டுள்ளார்.