ADDED : செப் 07, 2024 02:50 AM
உடுமலை;'ஆதார்' அடையாள அட்டை திருத்தம் மற்றும் 'அப்டேட்' செய்ய, உடுமலை தாலுகாவில், கூடுதலாக மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை தாலுகாவில், 5 உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதிக மக்கள் தொகையை உள்ளடக்கிய இத்தாலுகாவில், அரசின் பல்வேறு இ-சேவைகளை பெற, போதிய மையங்கள் இல்லை.
ஆதார் அடையாள அட்டையில் பிழை திருத்தம், மொபைல்போன் எண் சேர்த்தல், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, 'அப்டேட்' செய்தல் ஆகிய பணிகளுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
தற்போது, உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள இ - சேவை மையம், தலைமை தபால் நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மட்டுமே, ஆதார் அட்டை சார்ந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த மையங்களில், நாளொன்றுக்கு, 25க்கும் குறைவான டோக்கன்கள் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், தொலைதுார கிராமங்களில் இருந்து வரும் மக்கள் நாள்தோறும், உடுமலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது.
இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக, உடுமலை தாலுகாவில், இச்சேவையை மேற்கொள்ளும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மேலும், உள்வட்டம் வாரியாக ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்துவது அவசியமாகும்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.