ADDED : செப் 30, 2024 11:16 PM

உடுமலை : கால்நடைத்துறை சார்பில், மடத்துக்குளம் வட்டாரத்தில், இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
உடுமலை கோட்ட கால்நடைத்துறை சார்பில், வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, கிராமங்களில், இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், மடத்துக்குளம், கணியூர் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு முகாம் நடந்தது.
கால்நடை டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.
உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஜெயராம் பேசியதாவது: 'ரேபிஸ்' எனப்படும் வெறிநோய் விலங்குகளிடமிருந்து குறிப்பாக நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும். வெறிநோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும், 60 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
இந்நோயானது பாதிக்கப்பட்ட நாய், பூனை மற்றும் வவ்வால்களின் உமிழ்நீர் வாயிலாக மனிதனுக்கு பரவுகிறது.
வெறிநோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் வாயிலிருந்து அதிகப்படியான எச்சில் வடிதல், தொடர்ச்சியாக கடிக்கும் இயல்புடன் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துவதால், நோய் பரவலை தடுக்கலாம்.
இவ்வாறு, பேசினார்.