/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டசபையில் எதிரொலித்த குப்பை பிரச்னை
/
சட்டசபையில் எதிரொலித்த குப்பை பிரச்னை
ADDED : ஜன 25, 2026 06:40 AM

- நமது நிருபர் -: நாடு சுதந்திரம் அடைந்த பின், கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருப்பூர். கடந்த, 20ம் நுாற்றாண்டில் ஜவுளி உற்பத்தியில் கோலோச்ச துவங்கியது. ஆடை உற்பத்தி துறையில் அசுர வளர்ச்சி பெற்று, ஆயத்த ஆடை உற்பத்தியின் மையமாக, உலக வரைபடத்தில் இடம் பெற்றது.
தனி மாவட்டமாக உருவெடுக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றதன் விளைவாக, கடந்த, 2009ல், கோவை மாவட்டத்தில் இருந்து பிரித்து, திருப்பூர், தனி மாவட்டமாக உதயமானது.
உள்நாடு, ஏற்றுமதி, இறக்குமதி ஆடை வர்த்தகம், விவசாயம், கோழிப்பண்ணை, சிற்ப தொழில், செம்பு தொழில், மர வேலைபாடு என, அனைத்து தொழில்களும் படுவேகமாக வளர, மக்கள் தொகையும் 'கிடுகிடு'வென உயர்ந்தது.
அதன் விளைவு, திருப்பூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து, கடந்த, 2006ல், 60 வார்டுகளை உள்ளடக்கி மாநகராட்சியாக உருவெடுத்தது.
தொடர் வளர்ச்சியால் தற்போது, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் வரிசையில், 6வது இடத்தில் இருக்கிறது. அதன் விளைவு, மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது.
லட்சக்கணக்கான வீடுகள், மக்கள் தொகை, வணிக, வர்த்தக நிறுவனங்கள், பனியன் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் என, அடர்த்தி நிறைந்ததாக திருப்பூர் மாநகராட்சி மாறியிருக்கிறது. ஒரு வீதி, தெரு மற்றும் நகரின் அடிப்படை தேவை, சுகாதாரம். இது, குப்பை மேலாண்மையில் இருந்து தான் துவங்குகிறது.
கேட்கப்படாத கேள்வி அந்த அடிப்படையில், திருப்பூர் மாநகர பகுதியின் சுகாதாரம் என்பது, கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. வீடுகள், ஓட்டல், வணிக வளாகங்களில் இருந்து தினசரி வெளியேறும் குப்பையின் அளவு மட்டும், 600 மெட்ரிக் டன்களை தாண்டிக் கொண்டிருக்கிறது.
அதற்கு காரணம், 'வெளியேறும் குப்பைகளை எங்கே கொட்டுவது? எப்படி மேலாண்மை செய்வது?' என்ற கேள்வி, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் இதுவரை கேட்கப்படவே இல்லை என்பது தான்.
மக்கள் மன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த இந்த கேள்வி, தற்போது, சட்டமன்றத்திலும் எதிரொலிக்க துவங்கியிருக்கிறது. மாநகராட்சியின் சுகாதார பிரச்னை அந்தளவு வீரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே இதற்கு காரணம்.
அதுவும் இந்த கேள்வியை எழுப்பியது, நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு என்பது தான் முக்கியம். 'திருப்பூரின் குப்பை பிரச்னை தொடர்பாக, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் நேரு விளக்கமளித்த போது, 'திருப்பூர் மாநகராட்சியில் எங்கு குப்பை கொட்ட சென்றாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
'குப்பையை அகற்ற தயாராக இருக்கிறோம்; ஆனால், எங்கே கொட்டுவது?' என கேள்வி எழுப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு தயாராக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். 'குப்பை பிரச்னைக்கு எதுமாதிரியான தீர்வு காணப்பட உள்ளது' என்பதை உள்ளூர் அமைச்சர் சாமிநாதன் விளக்கினார்.
அரசியல் நோக்கர்கள் சிலர் கூறுகையில், 'திருப்பூரின், தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ள குப்பை பிரச்னை, ஒரு வழியாக சட்டசபையில் எதிரொலிக்க துவங்கியிருக்கிறது; அரசின் கவனமும் திரும்பியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளை மக்களும் உன்னிப்பாக கவனிக்க துவங்கியுள்ளனர்; மக்களின் செயல்பாடுகளை அரசும் கவனித்து வருகிறது.
தேர்தல் சமயத்தில், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
திருப்பூர் மாநகர பகுதியின் சுகாதாரம் என்பது, கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. வீடுகள், ஓட்டல், வணிக வளாகங்களில் இருந்து தினசரி வெளியேறும் குப்பையின் அளவு மட்டும், 600 மெட்ரிக் டன்களை தாண்டிக் கொண்டிருக்கிறது

