/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரந்தர தீர்வை நோக்கி குப்பை பிரச்னை
/
நிரந்தர தீர்வை நோக்கி குப்பை பிரச்னை
ADDED : மார் 02, 2026 04:37 AM
திருப்பூர்: திருப்பூரில் நான்கு மையங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் நாளை முதல் செயல்படத் துவங்குகின்றன.
திருப்பூரில் தினமும் 800 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. முறையான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நோக்கி மாநகராட்சியின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
l நிரந்தர செயலாக்க மையம் அமைக்கப்பட்டவுடன், இடுவாய் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தற்காலிக திடக்கழிவு சேமிப்பு மையத்தில் இருந்து குப்பைகள் அறிவியல்பூர்வமாக அகற்றப்பட்டு, பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்.
l மக்கும் கழிவு செயலாக்க மையங்கள் மூலம் தினமும் 120 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள் அறிவியல் பூர்வமான முறையில் உரமாக்கப்படுகின்றன. இதன் மூலம் 45 சதவீத மக்கும் கழிவுகள் இதரக் கழிவுகளுடன் கலக்காமல் தடுக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,972 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள் உரமாக மாற்றி, மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நுண்ணுர மையங்களில் விரைவாகத் தரம் பிரித்து அரைக்க, கூடுதலாக 12 புதிய அரவை இயந்திரங்கள் நிறுவப்படுகிறது.
l நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த 42,000 மெட்ரிக் டன் பழைய கழிவுகளை அறிவியல் பூர்வமாக அப்புறப்படுத்த நான்கு தற்காலிக சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவில்வழி மையத்தில் 'டிரோமல்' இயந்திரம் நிறுவப்பட்டு கழிவுகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெருப்பெரிச்சல் மையத்தில் ட்ரோமல் இயந்திரம் நிறுவும் இறுதிக்கட்டப்பணிகள் நடக்கின்றன. டிரோமல் இயந்திரங்கள் மூலம் சலித்து எடுக்கப்படும் கழிவுகளில், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. மறுசுழற்சி செய்ய இயலாத எரிக்கக் கூடிய கழிவுகள், அரியலுார் சிமென்ட் ஆலைக்கு இதுவரை 47.7 மெட்ரிக் டன் கழிவு அனுப்பப்பட்டுள்ளது.
l கனரக அரவை இயந்திரத்தில், ட்ரோமல் மூலம் பிரிக்கும் கழிவுகள் சிறிய துண்டுகளாக அரைக்க 89.15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய இயந்திரம் நிறுவப்பட உள்ளது.
l பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அழுத்திச் சுருக்கிப் போக்குவரத்து செய்ய ஏதுவாக 69.75 லட்சம் ரூபாய் மதிப்பில் பேலிங் இயந்திரம்,நெருப்பெரிச்சல், கோவில்வழி, வேலம்பாளையம், சுண்டமேடு ஆகிய நான்கு மையங்களில் அமைக்கப்படுகிறது.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மொத்தம் மூன்று கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நாளை நான்கு மையங்களிலும் குப்பைகள் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் துவக்கி வைக்கப்படவுள்ளது.
கழிவில் இருந்து: மின்சாரம் தயாரிக்க திட்டம்: 'கழிவிலிருந்து எரிசக்தி' கொள்கையின் கீழ், ஈரக்கழிவுகளை மதிப்பு கூட்டிய எரிபொருளாக மாற்றும் திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. திருப்பூரில் 10 மெட்ரிக் டன் உயிரி எரிவாயு ஆலை மற்றும் 200 மெட்ரிக் டன் பயோ காஸ் உற்பத்தி ஆலைத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாநகராட்சிகள் இணைந்து, தினமும் 1200 மெட்ரிக் டன் மக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மண்டல அளவிலான, கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மெகா திட்டம் 200 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம், மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதோடு, பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் மின் விற்பனை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டவும், வழிவகை செய்யும். தமிழகத்தில் முதல்முறையாக திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும்.

