/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெலட்டின் வெடித்து மண் அள்ளும் பணி; பல்லடம் அருகே போலீசார் விசாரணை
/
ஜெலட்டின் வெடித்து மண் அள்ளும் பணி; பல்லடம் அருகே போலீசார் விசாரணை
ஜெலட்டின் வெடித்து மண் அள்ளும் பணி; பல்லடம் அருகே போலீசார் விசாரணை
ஜெலட்டின் வெடித்து மண் அள்ளும் பணி; பல்லடம் அருகே போலீசார் விசாரணை
ADDED : டிச 25, 2024 07:48 AM

பல்லடம் : திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, கே.அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யன் குட்டையில், வண்டல் மண், களி மண் அள்ள வருவாய் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சில தினங்களாக மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், ஜெலட்டின் வெடி மருந்து பயன்படுத்தி, மண் அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
நேற்று முன்தினம் மதியம், 3.00 மணியளவில் வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. அய்யன் குட்டைக்கு சென்று பார்த்தபோது, மண் அள்ளுவதற்காக, 7 இடங்களில் ஜெலட்டின் வெடி மருந்துகள் வைக்கப்பட்டு, குட்டையில் இருந்த பாறைகள் தகர்க்கப்பட்டிருந்தன. குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில், அனுமதியின்றி வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கல்குவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஜெலட்டின் வெடி மருந்து குட்டையில் மண் அள்ளுவதற்கு எப்படி கிடைத்து. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அய்யன் குட்டையில், விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், தாசில்தார் ஜீவா கூறுகையில், ''பொக்லைன் வைத்து தான், மண் அள்ளப்பட்டு வருகிறது. வெடி மருந்து பயன்படுத்தியதாக தெரியவில்லை,'' என்றார்.
புகார் குறித்து விசாரித்து வருவதாக, பல்லடம் போலீசார் கூறினர்.