கிராமங்களுக்கு செல்லும் 'டப்பா' பஸ்களை மாத்தி கொடுங்க! அடிக்கடி பழுதால் நடுவழியில் மக்கள் தவிப்பு
கிராமங்களுக்கு செல்லும் 'டப்பா' பஸ்களை மாத்தி கொடுங்க! அடிக்கடி பழுதால் நடுவழியில் மக்கள் தவிப்பு
UPDATED : ஜூலை 23, 2026 11:37 PM
ADDED : ஜூலை 23, 2026 05:32 PM

உடுமலை: உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும், 10க்கும் மேற்பட்ட பஸ்கள் அடிக்கடி மக்கர் செய்து, வழியில் பழுதாகி நிற்பது தொடர்கதையாகியுள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை மாற்றி, பராமரிப்பையும் மேம்படுத்த வேண்டும் என அரசை மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை அரசு கிளை போக்குவரத்துக்கழகத்தில் இருந்து, 106 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
பிரதான வழித்தடம் மட்டுமல்லாது, போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையே அதிகமாகும். சில கிராமங்களுக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், நீண்ட காலமாக இயக்கப்படுவதால், அடிக்கடி பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுகிறது. சில பஸ்கள், பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
உதாரணமாக, நேற்று கோமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் உடுமலை நகரையே தாண்டவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்துக்குப்பிறகு, பஸ் பழுது பார்க்கப்பட்டு, வழித்தடத்தில் சென்றது.
இரவு நேரங்களில் கிராம பஸ்கள் பழுதாகி நின்றால், மக்களுக்கு மாற்று பஸ்கள் கூட இயக்கப்படுவதில்லை. தனியார் பஸ்களும் அவ்வழித்தடத்தில் இருக்காது என்பதால், சரக்கு வாகனங்களில் அபாய முறையில் பயணிக்கின்றனர்.
கிராமங்களுக்கு செல்லும், 10க்கும் மேற்பட்ட பஸ்களின் நிலை இவ்வாறு உள்ளது. எனவே இத்தகைய பஸ்கள் பராமரிப்பில் போக்குவரத்து கழகத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், பணிமனையில் காலிப்பணியிடங்கள், ஸ்பேர்கள் பற்றாக்குறையால், பல பஸ்கள், டிரைவர் சாமர்த்தியம் காரணமாகவே வழித்தடத்தில் ஓடுகிறது என தெரிவிக்கின்றனர்.
பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு, கிராம வழித்தடங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள், மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில், 'டிரிப்' கட் செய்யப்பட்டுள்ளதால், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர்.
அரசு போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 'டப்பா' பஸ்கள் இயக்கம் குறித்து ஆய்வு செய்து, புதிய பஸ்கள் இயக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொலைதுாரமும் சிரமம் உடுமலையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், காலை, மாலை நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
பழநியில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால், உடுமலையில் அந்த பஸ்களில் ஏற முடிவதில்லை. வார விடுமுறை நாட்களில் தொங்கியபடியே பயணிக்கின்றனர்.
பயணிகள் எண்ணிக்கையை கணக்கிட்டு, கோவை, திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்க, போக்குவரத்து கழக கோவை மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
