/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னைக்கு 'குட் பை': 15 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு என்கிறார் மேயர்
/
குப்பை பிரச்னைக்கு 'குட் பை': 15 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு என்கிறார் மேயர்
குப்பை பிரச்னைக்கு 'குட் பை': 15 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு என்கிறார் மேயர்
குப்பை பிரச்னைக்கு 'குட் பை': 15 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு என்கிறார் மேயர்
UPDATED : ஜன 29, 2026 07:44 AM
ADDED : ஜன 29, 2026 05:13 AM

திருப்பூர்: ''திருப்பூரில் கடந்த, 40 ஆண்டுகளாக இருந்து வந்த குப்பை கொட்டும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் பணி நடந்து வருகிறது'' என, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறினார். திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகரில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பேசியதாவது:
திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவு, கடந்த, 40 ஆண்டுகளாக பாறைக்குழிகளில் தான் கொட்டப்பட்டு வந்தது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கூடங்கள் இருப்பினும், சில இடங்களில் செயல்பட்டன; சில செயல்படாமல் இருந்தன. குப்பை மேலாண்மை செய்வதற்கான கட்டமைப்பும் போதுமானதாக இல்லை.
முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வந்த நிலையில், தடை கேட்டு, வேலுசாமி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததன் விளைவாக, எந்தவொரு பாறைக் குழியிலும் குப்பை கொட்ட ஐகோர்ட் தடை விதித்தது; மாற்று ஏற்பாடுக்கான பல யோசனைகளையும் கூறியது.
35 ஆயிரம் டன் குப்பை மொத்தம், 159 சதுர கி.மீ. பரப்பளவுடன், நான்கு மண்டலம், 60 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாநகராட்சியில், 13.99 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 3 லட்சத்து 15 ஆயிரத்து 732 குடியிருப்புகள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக தினசரி, 523 மெட்ரிக் டன் குப்பை வெளியேறுகிறது; இதில் உலர் கழிவு, 288 மெட்ரிக் டன், ஈரக்கழிவு, 315 மெட்ரிக் டன்.
ஏறத்தாழ, 100 நாட்களாக குப்பை அள்ளப்படாததால், 96 இடங்களில், 35 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மலை போல் குவிந்தது. ஐகோர்ட் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய பரிந்துரை அடிப்படையில், இடுவாய் பகுதியில் தற்காலிகமாக உலர் கழிவுகளை மட்டும் கொட்டி, மேலாண்மை செய்யும் பணி துவங்கி, நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் எவ்வித சுகாதாரகேடும் ஏற்படாது.
குப்பை மேலாண்மை பணி மேற்கொள்ள, நெருப்பெரிச்சலில், 15 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக, மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள் முதற்கட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்கா உருவாக்கப்படும். உரிய உபகரணங்களை நிறுவி, மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் படி, மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, முழுமையாக அங்கு மேலாண்மை செய்து அகற்றப்படும். கூடுதலாக, திடக்கழிவு மேலாண்மை பணிக்கு, கூடுதலாக, 15 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவும் அரசு தயாராக இருக்கிறது; அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏ.ஐ. தொழில்நுட்பம் குப்பைத் தொட்டி அகற்றப்பட்ட இடங்கள், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களில், முதற்கட்டமாக, 40 கேமரா பொருத்தப்பட்டு, ஏ.ஐ. தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்; விதிமீறி குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு ஒட்டுமொத்த திடக்கழிவு மேலாண்மை பணியையும், ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக, குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்லியுள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

