/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணை காப்பாற்ற 'ஆம்புலன்ஸாக' மாறிய அரசு பஸ்
/
பெண்ணை காப்பாற்ற 'ஆம்புலன்ஸாக' மாறிய அரசு பஸ்
ADDED : மார் 18, 2025 05:27 AM

பல்லடம், : ஓடும் பஸ்சில் மயக்கமடைந்த பயணி ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க, அரசு பஸ் ஒன்று ஆம்புலன்ஸாக மாறியது.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளம் வரை செல்லும் அரசு டவுன் பஸ் (எண்:17) நேற்று மதியம், திருப்பூர் புறப்பட்டது.
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் ஏறிய பெண் பயணி ஒருவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது, மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள், இது குறித்து நடத்துனர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.
அவர், ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார்.
பஸ்ஸில் உள்ள பயணிகளை மாற்று பஸ்ஸில் அனுப்பி விட்டு, மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.
அதன்படி, பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள், மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச் செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர். இதனை தொடர்ந்து, துரிதகதியில் செயல்பட்ட ஓட்டுநர் ராசு கண்ணன், அரசு பஸ்ஸை ஆம்புலன்ஸாக கருதி வேகமாக இயக்கினார்.
அடுத்த சில நிமிடத்தில், அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.