/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மையத்தடுப்பில் சருகுகளான புற்கள்
/
மையத்தடுப்பில் சருகுகளான புற்கள்
ADDED : ஜன 16, 2025 11:32 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. திருப்பூர் நகரைக் கடந்து தாராபுரம் சென்று சேரும் வகையில் இந்த ரோடு அமைந்துள்ளது.
நீண்ட கால கோரிக்கைக்குப் பின் இந்த ரோடு அகலப்படுத்தி, விரிவுபடுத்தி, நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மையத்தடுப்பு அமைக்கப்பட்டு, விபத்துகள் ஏற்படாத வகையிலும், வாகனங்கள் தடையின்றி விரைவாகச் செல்லும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரோட்டில் திருப்பூரைக் கடந்து செல்லும் ரோட்டில் பெரும்பாலான பகுதியில் மையத் தடுப்புகளில் புற்கள் முளைத்து காய்ந்து சருகுகளாகக் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் பைபாஸ், என்.எச்., ரோடுகளில் மையத் தடுப்புகளில், அரளிச் செடிகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இந்த செடி, வாகனங்கள் வெளியேற்றும் புகையிலிருந்து வெளியாகும் கார்பனை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதற்காக அரளி செடியை இது போன்ற மையத்தடுப்புகளில் வளர்க்கின்றனர். ஆனால், தாராபுரம் ரோட்டில் உள்ள மையத்தடுப்புகளில் வெறும் புற்களும், தேவையற்ற தாவரங்களும் முளைத்து, காய்ந்து சருகுகளாக காட்சியளிக்கின்றன.
இவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கவும், வெயில் காலங்களில் தீப்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.