/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமைசார் உற்பத்தி; திருப்பூர் முன்னிலை
/
பசுமைசார் உற்பத்தி; திருப்பூர் முன்னிலை
ADDED : அக் 19, 2024 11:38 PM
ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துறையினரும் முனைப்புடன், 'கிரீன் திருப்பூர்' என்ற முழு மையான சர்வதேச தரச் சான்றிதழைப் பெறுவதன் மூலம், ஐரோப்பா உள்பட இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும். இதன்மூலம், திருப்பூர் மிகப்பெரும் வளர்ச்சியைப் பெறுவது சாத்தியமாகும்.
பருவநிலை மாற்றம், உலகளாவிய நாடுகளை பல்வேறு நிலைகளில் பாதிக்க செய்திருக்கிறது; விழித்துக்கொண்ட நாடுகள், பூமியை காக்க, பாதுகாப்பு நடைமுறைகளை சட்டமாக்கவும் தயாராகிவிட்டன. முதன்முதலாக, ஜவுளி உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான உற்பத்தி கொள்கை குறித்து, ஐரோப்பா பல்வேறு நிபந்தனைகளை சட்டமாக இயற்றியுள்ளது.
உண்மையான பசுமை சார் உற்பத்தி கோட்பாடுகள் இல்லாமல், பசுமை உற்பத்தி என்று கூறுவதை, வளர்ந்த நாடுகள் ஏற்பதில்லை; ஒவ்வொரு பொருளுக்கான கார்பன் உமிழ்வு கண்டறியப்பட்டு, ஒவ்வொரு பொருளிலும், கார்பன் உமிழ்வு எவ்வளவு இருக்கிறது; எவ்வளவு தண்ணீர் உபயோகம் செய்துள்ளனர்; பயன்படுத்திய எரிசக்தி அளவு போன்றவை வரையறுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய, பசுமை உற்பத்திக்கு, ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு இருக்க வேண்டும்; அதற்காகவே, 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' திட்டத்தையும், ஐரோப்பிய நாடுகள் கட்டாயமாக்க உள்ளன.
திருப்பூர் வளர்ச்சிக்கான வாய்ப்பு
ஐரோப்பிய நாடுகளின் முதல் எதிர்பார்ப்பு, இறக்குமதியாகும் பொருட்களில், குறைந்தபட்சம், 50 சதவீத பொருட்கள், மறுசுழற்சி (சர்குலாரிட்டி) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்; கார்பன் உமிழ்வும், தண்ணீர் உபயோகமும் குறைந்திருக்க வேண்டும் என்பதுதான்.
மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், உற்பத்தியில் கழிவு உருவாவது குறைக்கும்; உற்பத்தி கழிவுகள், மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. கார்பன் உமிழும் எரிசக்தி பயன்பாடும் குறைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. இது, 2030 முதல் சட்டமாகவும் வரப்போகிறது.
இயற்கையை பாதுகாக்கும் நிபந்தனைகள் வந்தால், உலக நாடுகள் அதற்கு முழுமையாக தயாராக வேண்டும்; ஆனால், ஏற்கனவே, பசுமை உற்பத்தியில் சாதனை படைத்த திருப்பூருக்கு, இந்த தருணம் மிகப்பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பசுமை சார் உற்பத்தி, நீடித்த நிலையான வளம் குன்றா வளர்ச்சி நிலை என்ற அடிப்படையில், திருப்பூர், 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 'கிரீன் திருப்பூர்' என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டது.
சர்வதேச வர்த்தக ஆலோசகர் கிரீஷ் கூறியதாவது:
திருப்பூரில், தாமதமாக இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு, சர்வதேச தரத்துடன் கூடிய நிறுவனம் வாயிலாக, தரச்சான்று பெறுவதற்கான முயற்சியை துவக்கி விட்டனர். சில நிறுவனங்கள் மட்டும், சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, அனைத்து வகையான தரச்சான்றிதழ்களையும் பெற்று, முழு அளவில் தயாராக இருக்கின்றன.
மூன்றாவது நபர் மூலம், ஆவணப்படுத்தி, தரச்சான்று பெற்ற தரமான ஏற்றுமதியாளர் என்ற நிலையில் இருக்க வேண்டும். தரச்சான்றிதழ் பெறுவதில், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து என்ன வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், அரசு உதவியும் கிடைக்கும்.
ஒட்டுமொத்த திருப்பூரும், கூட்டு முயற்சி செய்தால், 'கிரீன் திருப்பூர்' என்ற முழுமையான சர்வதேச தரச்சான்றிதழ்களை பெற்று, ஐரோப்பா மட்டுமல்ல, அனைத்து இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வது எளிதாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அது என்ன இ.எஸ்.ஜி.,?
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் உருவாகும், 'கட்டிங் வேஸ்ட்', 100 சதவீதம் மறுசுழற்சிக்கு சென்று கொண்டிருக்கிறது; வேறு பயன்பாட்டுக்கு வழங்குவதில்லை. ஐரோப்பா எதிர்பார்ப்பது இ.எஸ்.ஜி., என்ற நிபந்தனை; இதில் 'இ' என்பது சுற்றுச்சூழலை குறிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற நிலையில் திருப்பூர் வென்றிருக்கிறது. 'எஸ்' என்பது சமூகத்தை குறிக்கும்; தொழிலாளர் பாதுகாப்பு, தொழிலக பாதுகாப்பு, சமூக நலனுக்கான நடைமுறைகள் என 'சமூக' நிபந்தனையில் 'பாஸ்' மார்க் வாங்கிவிட்டது. 'ஜி' என்பது 'கவர்னன்ஸ்'; அதாவது அரசு விதிமுறைகளை மதிப்பது, அதிக ஈடுபாடுடன் வரியினங்களை முறையாக செலுத்துவது போன்றது; அவற்றிலும், திருப்பூர் முன்னோடியாக உயர்ந்திருக்கிறது.
ஐரோப்பா, 2030ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் புதிய நிபந்தனைகள் மற்றும் பசுமை சட்டங்களுக்கு, திருப்பூர் மட்டுமே உடனடியாக உடன்பட்டு, உற்பத்தி ஆர்டர்களை ஈர்க்க முடியும். அந்த அளவுக்கு, திருப்பூர் முழு அளவில் தயாராக இருக்கிறது.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம்
திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, தேவையான எரிசக்தியை காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளி 'கிளஸ்டர்' என்று பார்க்கும் போது, திருப்பூர் 'கிளஸ்டர்' மட்டுமே, உலக அளவில், முதன்முதலாக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, வெற்றி கண்டுள்ளது. ஒவ்வொரு நாளும், சாயக்கழிவுநீரில், 96 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.