/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்கா, கஞ்சா ஒழித்துக்கட்ட களமிறங்கிய போலீஸ்
/
குட்கா, கஞ்சா ஒழித்துக்கட்ட களமிறங்கிய போலீஸ்
ADDED : ஜூன் 22, 2024 05:46 PM

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயம் இறப்பு எதிரொலியாக மாநகரில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, புகையிலை விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துகளை சிறுவர்களும், இளம் தலைமுறையினரும் பயன்படுத்தி சீரழியுகின்றனர். மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில், 53 பேர் இறந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, போலீசார் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, குட்கா போன்றவை சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகரம் மற்றும் புறநகரில் உள்ள போலீசார் இதுதொடர்பான புகார்களுக்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக, பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குட்கா விவகாரத்தில் கைது நடவடிக்கையோடு இல்லாமல், கடைகளுக்கு 'சீல்', அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எதிரொலியாக மாநகரம், புறநகரில் கமிஷனர், எஸ்.பி., உத்தரவின் பேரில், மூன்று நாட்களாகவே ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மதுவிற்பனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுவரை, சாராயம் பறிமுதல் குறித்து எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், குட்கா, கஞ்சா, சட்டவிரோத மது விற்பனைகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் ஸ்டேஷன் நிலவரங்கள் குறித்து உளவுப்பிரிவு போலீசார் கமிஷனர், எஸ்.பி.,க்கு தகவல் அளித்து வருகின்றனர். இவ்விஷயத்தில் எவ்வித அலட்சியம், புகார்களுக்கு ஆளாக கூடாமல், பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.