ஏழைகள் கல்விக்கு உதவுங்கள்: சைதை துரைசாமி வேண்டுகோள்
ஏழைகள் கல்விக்கு உதவுங்கள்: சைதை துரைசாமி வேண்டுகோள்
UPDATED : ஆக 16, 2026 06:17 PM
ADDED : ஆக 16, 2026 06:00 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை சார்பில், எம்.ஜி.ஆர்., 109வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு, திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பேரவை நிர்வாக குழு உறுப்பினர் மோகன் செல்வக்குமார் வரவேற்றார். பல்வேறு போட்டிகள் நடந்தன. 109 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. மதிய விருந்து அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய தலைவர் சைதை துரைசாமி, பேசியதாவது:
சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். ஏழை, எளிய மக்கள் வாழ்க்கை மேம்பட வேண்டுமென, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். எம்.ஜி.ஆரின் பக்தர்களாக வாழும் நண்பர்கள், ஒவ்வொருவரும் 6வது முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவரின் கல்விக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். மேல்படிப்பை தொடர என்னால் முடிந்ததை செய்கிறேன். கல்வியால் மட்டுமே, சமுதாயத்தை உயர்த்த முடியும்; கல்வி அனைவருக்கும் கிடைக்க உதவ வேண்டும்.
