/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு உயர்தர சிகிச்சை சாத்தியம்! திருப்பூரில் ரூ.100 கோடியில் லேசர் சிகிச்சை மையம் திறப்பு
/
அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு உயர்தர சிகிச்சை சாத்தியம்! திருப்பூரில் ரூ.100 கோடியில் லேசர் சிகிச்சை மையம் திறப்பு
அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு உயர்தர சிகிச்சை சாத்தியம்! திருப்பூரில் ரூ.100 கோடியில் லேசர் சிகிச்சை மையம் திறப்பு
அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு உயர்தர சிகிச்சை சாத்தியம்! திருப்பூரில் ரூ.100 கோடியில் லேசர் சிகிச்சை மையம் திறப்பு
ADDED : பிப் 25, 2026 05:34 AM

திருப்பூர்: தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளையினரின் முயற்சியால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நவீன மருத்துவ வசதிகள் கொண்ட புற்றுநோய் நவீன கதிரியக்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் புத்துணர்வு மையம் மற்றும் முதலாம் வகை சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதோடு, 100 படுக்கை வசதி கொண்ட புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் மனோன்மணி வரவேற்றார்.
முன்மாதிரி மாவட்டம்! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் தலைமை செயலர் செந்தில்குமார் பேசுகையில், ''மாவட்டந்தோறும், இதுபோன்று 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்புடன் மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, அதன் முக்கியத்துவம் உணரப்படும்; சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க முடியும். அந்த வகையில் திருப்பூர், முன்மாதிரி மாவட்டமாக விளங்குகிறது,'' என்றார்.
புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்,''இத்திட்டம் குறித்து முதல்வரிடம் கூறிய போது, உடனே ஒப்புதல் வழங்கினார். பொதுமக்களின் பங்களிப்பு, 30 கோடி, அரசின் பங்களிப்பு, 60 கோடி என மொத்தம், 90 கோடி ரூபாயில் இத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படவுள்ளது.
இம்மருத்துவமனையில், கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்; முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய உதவி பெற்றுத்தர முயற்சி செய்வேன்,'' என்றார்.நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் அமித், தேசிய சுகாதார இயக்க மேலாண்மை இயக்குனர் அருண்தம்புராஜ் ஆகியோர் பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ரோட்டரி கவர்னர் தனசேகர், 'மென்டார்' நாராயணசாமி, துணைத் தலைவர் கார்த்திகேயன், செயலர் இளங்குமரன், பொருளாளர் அருள் செல்வம், 'இதயங்கள்' அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் உட்பட அறங்காவலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.
ரூ. 58 கோடியில் பணி! கதிர்வீச்சு வாயிலாக புற்றுநோயை குணப்படுத்தும் லினியர் ஆக்ஸிலரேட்டர் உபகரணம், 25.46 கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளது. 6.37 கோடி ரூபாய் செலவில் பிராக்கி தெரபி இயந்திரம், 1.50 கோடி ரூபாய் செலவில் ரோட்டரி மறுவாழ்வு மைய கட்டடம், 19.41 கோடி ரூபாய் செலவில், 100 படுக்கை கொண்ட, கட்டடத்திற்கான அடிக்கல் என, 58 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவேற நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும், நிர்வாக ரீதியான பணிகளை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்காற்றிய திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதனுக்கு, 'மருத்துவ திலகம்' என்ற விருதை அமைச்சர் சாமிநாதன் வழங்கினர்.
நிகழ்ச்சியில், டாக்டர் முருகநாதன் பேசியதாவது:
இந்தியாவில், மிகச் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக இதனை மாற்றுவதே லட்சியம். ஒருவருக்கு புற்றுநோய் வந்துள்ளதா, இல்லையா என்பதை 'ஜெனரிக் டெஸ்ட்' வாயிலாக கண்டறிய முடியும். எந்த வகை புற்றுநோய், எப்போது வரும் என்பதை கூட கண்டறிய முடியும்.
இந்த பரிசோதனை, இந்தியாவில் எந்த மருத்துவமனையிலும் இல்லை. நோயை கண்டறிய, 18 கோடி ரூபாயில் உபகரணம் பொருத்த வேண்டும். அதேபோல், குழந்தைகளை தாக்கும் கேன்சர் குறித்தும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதற்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதுபோன்ற பணிகளுக்கு வங்கியினர், பெரும் தொகையை நன்கொடையாக வழங்குவதை அறிய முடிகிறது. அந்த வகையில், 100 கோடி ரூபாயை திரட்டி, அத்தகைய உபகரணங்களை பொருத்தி, நாட்டில் எங்குமில்லாத உயர்தர சிகிச்சை வழங்கும் மையமாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

