ADDED : மார் 20, 2024 12:37 AM

திருப்பூர்:மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்க விரும்புவோருக்கான 12டி படிவம், இன்று முதல் வீடு தேடிவருகிறது.
லோக்சபா தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 12, 760 மாற்றுத்திறனாளி; 85 வயதுக்கு மேற்பட்ட 30,822 வாக்காளர் உள்ளனர்.
இவர்கள், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய, 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்கவேண்டும்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், இன்று முதல் வீடுவீடாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு, படிவம் 12டி வழங்குகின்றனர்.
இதுதொடர்பாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்காளருக்கு விருப்ப படிவம் வழங்குவது குறித்த கூட்டம், சப்கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்றது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்; அவர்களுக்கு, படிவம் 12டி வழங்கப்பட்டது.

