ADDED : ஏப் 26, 2025 12:00 AM

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சின்னகருணை பாளையத்திலிருந்து ஆகாசராயர் கோவிலுக்கு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குதிரை வாகன ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என பெருமை கொண்டதாகவும் விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்ற நாளுக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையான நேற்று அவிநாசி அருகேயுள்ள சின்ன கருணை பாளையம் கிராம மக்கள், குதிரை வாகன ஊர்வலம் நடத்தினர்.
மங்கலம் ரோட்டில், ராயன் கோவில் காலனி பகுதியில் எழுந்தருளியுள்ள ஆகாசராயர் கோவிலுக்கு மலர்களால் அலங்கரித்த குதிரையை சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், தோளில் சுமந்தபடி பெரியகருணை பாளையம், கவுண்டம்பாளையம், கோவை - சேலம் பைபாஸ் ரோடு, ராயன் கோவில் காலனி வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
குதிரை ஊர்வலம் நடந்த போது, பக்தர்களுக்கு குடிநீர், மோர் மற்றும் குளிர்பானம் ஆகியவை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆகாசராயருக்கு பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சின்னக்கருணைபாளையம் கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

