/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? மாநில முதலிடம் பெற்ற அஜீத்குமார் வழங்குகிறார் 'டிப்ஸ்'
/
எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? மாநில முதலிடம் பெற்ற அஜீத்குமார் வழங்குகிறார் 'டிப்ஸ்'
எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? மாநில முதலிடம் பெற்ற அஜீத்குமார் வழங்குகிறார் 'டிப்ஸ்'
எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? மாநில முதலிடம் பெற்ற அஜீத்குமார் வழங்குகிறார் 'டிப்ஸ்'
ADDED : பிப் 03, 2024 11:43 PM
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு, 615 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. அதில், 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டது. இத்துறை தேர்வில் தமிழகம் முழுவதும் காவல்துறையில் பணிபுரிந்து வரும், 16 ஆயிரத்து, 11 போலீசார் பங்கேற்று போட்டியிட்டனர். அதில், எழுத்து, உடல்திறன், நேர்முகம் என, மூன்று கட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது.
நான்கு பேர் தேர்ச்சி
திருப்பூரில் பணிபுரிந்து வரும், அஜீத்குமார், சுரேஷ், கணேசமூர்த்தி, கனிராஜா என, நான்கு போலீசார் தேர்ச்சி பெற்றனர். அதில், மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த அஜீத்குமார் தமிழக அளவில் முதலிடம், தெற்கு போக்குவரத்து முதல்நிலை போலீஸ் சுரேஷ் ஐந்தாமிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜீத்குமார், 28. பி.எஸ்.சி., படித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு காவல்பணியில் இணைந்து, தற்போது, திருப்பூர் மாநகரில், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். பல்வேறு பணி சூழல், குடும்ப சூழல் என, அனைத்தையும் சமாளித்து நம்பிக்கையுடன், பொறுமையுடன் தேர்வுக்கான தொடர் பயிற்சி மேற்கொண்டு அஜீத்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐந்தாவது முயற்சி
அஜீத்குமார் கூறியதாவது:
கல்லுாரி படிப்பை முடித்த பின், டி.என்.பி.எஸ்.சி.,க்கு தயாராகி வந்தேன். அந்த நேரத்தில், எஸ்.ஐ., தேர்வுக்கான அறிவிப்பு இல்லாததால், பின், போலீசாருக்கான தேர்வு எழுதி, கடந்த, 2017 ம் ஆண்டு காவல்துறையில் வந்தேன். தொடர்ந்து, எஸ்.ஐ.,தேர்வுக்காக தயாராகி வந்தேன். எஸ்.ஐ.,யில் தடயவியல், டெக்னிக்கல் போன்ற பிரிவிலும், அதுதவிர, இருமுறை எஸ்.ஐ.,க்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. ஐந்தாவது முயற்சியில் தற்போது கிடைத்தது.
முதலில், ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதில், தமிழ், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்தில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் சிறப்பாக படிக்க வேண்டும்.
நேரத்தை பயன்படுத்துங்கள்
பணியில் இருந்து படிக்க ஆரம்பிக்கும் போது, எல்லா நேரத்திலும் படிக்க நேரம் கிடைக்காது. கிடைக்கும் நேரத்தை உபயோகப்படுத்தி கொண்டேன். இதற்காக பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். அங்கு நடக்கும் வாராந்திர தேர்வு சில நேரங்களில், பணி நிமித்தமாக எழுத முடியாமல் போகும். மீண்டும் செல்லும் போது, அந்த தேர்வை தவிர்க்காமல், எழுதி கொடுத்த பின், மீண்டும் வகுப்பில் பங்கேற்பேன்.
சந்தேகம் நிவர்த்தி
அதுதவிர என்னுடன் தேர்ச்சி பெற்ற போலீஸ்காரர் சுரேஷ் பாடத்தில் ஏற்படும் சந்தேகம், சட்டம் தொடர்பான சந்தேகங்கள் போன்றவற்றை நிவர்த்தி செய்து கொடுத்தார். எனக்கு பெரும் உதவியாக இருந்தார். அலுவலகத்திலும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.