ADDED : ஏப் 19, 2025 11:34 PM
திருப்பூர்: காங்கயம் பகுதியில் ரோடு அமைத்தல் உள்ளிட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் துவக்க விழா நடந்தது.
வெள்ளகோவில், வள்ளியரச்சல் ஊராட்சியில், முதல்வர் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில், 42 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கப்படுகிறது.
வேலப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியில் 20 லட்சம் மதிப்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரை மட்டத் தொட்டி கட்டப்படுகிறது. முத்துார் அருகே, ராமலிங்கபுரத்தில், 1.16 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரோடு அமைக்கப்படுகிறது.
மூத்தநாயக்கன்வலசில் 5.58 லட்சம் மதிப்பில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் போர்வெல் அமைக்கப்படுகிறது. மயில்ரங்கத்தில் 20 லட்சம் மதிப்பில் மயானத்துக்கு அணுகு சாலை அமைக்கப்படவுள்ளது.
காங்கயம் ஒன்றியம் பரஞ்சேர்வழியில் பூச்சக்காட்டு வலசுக்கு 9 கோடி ரூபாய் மதிப்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.
குண்டடம் ஒன்றியம், வீணம்பாளையத்தில், சுள்ளிபெருக்கிபாளையம் வரை புதிய ரோடு, 86 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
அவ்வகையில் ஏறத்தாழ 12 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.இவற்றை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார்.