கிடப்பில் புறவழிச்சாலை திட்டம் :தொழில் துறையினர் கவலை
கிடப்பில் புறவழிச்சாலை திட்டம் :தொழில் துறையினர் கவலை
UPDATED : ஆக 04, 2026 09:01 PM
ADDED : ஆக 04, 2026 08:33 PM

பல்லடம்:பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, புதிய புறவழிச்சாலை திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. 54 கோடி ரூபாய் செலவில், செட்டிபாளையம் ரோட்டில் இருந்து, மாதப்பூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்டது.
கடந்தாண்டு நவ., மாதம் பணிகள் துவங்கிய நிலையில், மார்ச் மாதமே பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், செட்டிபாளையம் சாலையுடன் இணைக்கும் இடத்தில் உள்ள, 8 சென்ட் இடம் மீதான வழக்கு காரணமாக புறவழிச்சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டசபை தேர்தல் மற்றும் கோடை கால கோர்ட் விடுமுறை ஆகியவற்றால், வழக்கு விசாரணையும் தாமதமானது. கடந்த மாதம் விசாரணை முடிந்து நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இதனால், புறவழிச்சாலை பணிகள் விரைந்து நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் கிடப்பில் உள்ளது தொழில் துறையினர், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறையினர் கூறியதாவது:
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்காதா? என, நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் உள்ளோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பசுமைவழிச் சாலை மற்றும் காளிவேலம்பட்டி பிரிவு -- மாதப்பூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான புறவழிச்சாலை ஆகியவை அமைப்பதில் தடங்கள் ஏற்பட்டது. இச்சூழலில், புதிய புறவழிச் சாலை திட்டம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்தால், இதிலும், தடங்கலுக்கு மேல் தடங்கள் ஏற்பட்டு வருகிறது. புறவழிச் சாலை அமைந்தால்தான் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கிடப்பில் உள்ள புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
