ADDED : பிப் 12, 2024 11:17 PM

உடுமலை;கோடை சீசனில் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், களிமண் விளைநிலங்களில், பீட்ரூட் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக பீட்ரூட் சாகுபடியாகிறது. களிமண் விளைநிலங்களில் மட்டும், பிரத்யேகமாக, மூன்று சீசன்களில், இச்சாகுபடியை மேற்கொள்கின்றனர்.
அறுவடைக்கு, காய்கள், 90 நாட்களில் தயாராகிறது. இந்தாண்டு, அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், குறைவான பரப்பளவிலேயே பீட்ரூட் நடவு செய்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: விதை, இடுபொருட்கள் விலை உயர்வால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப விலை கிடைப்பதில்லை.
எனவே, பீட்ரூட்டில், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு, வேளாண் பல்கலை., வாயிலாக பயிற்சி வழங்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, தெரிவித்தனர்.