/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசன கட்டமைப்புகள் புதுப்பிக்கும் பணி ரூ. 10 கோடி மதிப்பில் துவக்கம்
/
பாசன கட்டமைப்புகள் புதுப்பிக்கும் பணி ரூ. 10 கோடி மதிப்பில் துவக்கம்
பாசன கட்டமைப்புகள் புதுப்பிக்கும் பணி ரூ. 10 கோடி மதிப்பில் துவக்கம்
பாசன கட்டமைப்புகள் புதுப்பிக்கும் பணி ரூ. 10 கோடி மதிப்பில் துவக்கம்
ADDED : பிப் 07, 2026 05:40 AM

உடுமலை: அமராவதி அணை மதகு மற்றும் பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணிகள், ரூ.10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அணையில், கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்களுக்கு நீர் திறக்கப்படும் மதகு பழுது காரணமாக, பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை உள்ளதோடு, இரண்டாம் போகம் நெல் சாகுபடியும் பாதித்துள்ளது. மதகை புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, அணை மதகின் நீர் கசிவினை தடுக்கும் வகையில், புனரமைத்தல் பணியின் கீழ், அமராவதி அணை வலதுகரை மண் அணை மதகில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை அடைக்கவும், கட்டுமான இணைப்புகளில் சிதிலமடைந்த பழைய சிமெண்டு பூச்சுகளை அகற்றி, புதிய சிமெண்டு பூச்சுகொண்டு நிரப்புதல்,
உள் மற்றும் வெளிப்பகுதிகளில் நீர்கசிவுகளை அடைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், சிமெண்ட் தளம், கரை வலுப்படுத்துதல், மேல்பூச்சு பூசுதல் மற்றும் மதகின் கதவணைகள் மற்றும் அதன் தூக்கு உபகரணங்களை மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ள, அரசு, 4.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அதே போல், அணையிலிருந்து, 64 கி.மீ., நீளம் அமைந்துள்ள அமராவதி பிரதான கால்வாய் பராமரிப்பின்றி, அடிக்கடி கால்வாய் உடைப்பு மற்றும் நீர் இழப்பு அதிகரித்து வந்தது. இதனையும் புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், அமராவதி பிரதான கால்வாய் சரகம் 16.5 மைல் முதல் 28.7 மைல் வரை அமைந்துள்ள குறுக்கு கட்டட அமைப்புகளை புனரமைத்தல் திட்டத்தின் கீழ், 13 கீழ்மட்ட குகை நீர் வழிப்பாதைகள் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கால்வாயில் சிதிலமடைந்து காணப்படும், 20 மதகுகள் மற்றும் அவற்றுக்கான கதவணைகள் ஆகியவற்றை புதுப்பித்தல் பணியும், கால்வாய் கரையில் சேதமடைந்த சிலாப்புகள், 314 மீட்டர் நீளத்திற்கு மறுசீரமைப்பு மேற்கொள்ள, ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் துவக்க விழா, மடத்துக்குளம், நரசிங்காபுரம் பகுதியிலுள்ள அமராவதி பிரதான கால்வாயில் நடந்தது.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி., ஈஸ்வரசாமி, முன்னாள் எம்.எம்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், கோட்டாட்சியர் குமார், நீர் வளத்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவி பொறியாளர்கள் தீனதயாளன், இந்திரபிரசாத், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை ஊராட்சிகளில், தலா, 75.34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டடங்கள், ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் ஆகியவற்றை அமைச்சர்கள், அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

