ADDED : ஏப் 08, 2026 08:21 PM

பல்லடம்:பல்லடம், செம்மிபாளையத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 25; கே.என்.புரம், சாமிகவுண்டம்பாளையம் பிரிவில், தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஹரீஷ் நிலைதடுமாறி பேரிகார்டு மீது மோதி விபத்துக்குள்ளானார். ஹெல்மெட் அணியாமல் வந்த அவர், பலத்த காயமடைந்து சாலையிலேயே மயங்கி விழுந்தார். இந்த விபத்து அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.
விபத்து நடந்த அதே தருணத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர், தன் கண்முன்னே ஒருவர் உயிருக்கு போராடுவதைக் கண்டும், துளியும் மனிதாபிமானமின்றி வேகமாகச் சென்றார். அவரைத் தொடர்ந்து வந்த பிற வாகன ஓட்டிகளும், சாலையில் விழுந்து கிடந்த நபருக்கு உதவாமல், அவர் மீது வாகனம் ஏறிவிடாதபடி விலகிச் சென்றார்களே தவிர, யாரும் மீட்க முன்வரவில்லை.
ஐந்து நிமிடங்கள் உயிருக்குப் போராடிய நிலையில் அந்த இளைஞர் அங்கேயே கிடந்துள்ளார். அதன் பின்னரே அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஆம்புலன்ஸிற்குத் தகவல் கொடுத்து அவரை மீட்டுள்ளனர். மனிதாபிமானம் மனிதர்களிடம் மறைந்து வருகிறதோ என்ற வேதனையை இது எழுப்பியுள்ளது. தற்போது அந்த இளைஞர் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பல்லடம், கே.என்.புரம், சாமிக்கவுண்டம்பாளையம் பிரிவில், பைக்கில் வந்த ஹரீஷ், 25 என்பவர் பேரிகார்டு மீது மோதி விபத்துக்குள்ளானார். அவரைக் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்லும் ஆட்டோ. சிறிது நேரம் கழித்து, அங்கு கூடிய பொதுமக்கள், அவரை மீட்டனர்.
