/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு நோக்கி பயணிக்கிறதா குப்பை விவகாரம்!
/
தீர்வு நோக்கி பயணிக்கிறதா குப்பை விவகாரம்!
ADDED : பிப் 06, 2026 05:23 AM
திருப்பூர்: குப்பை விவகாரத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளான திருப்பூர், திடக்கழிவு மேலாண்மையில் முன்னுதாரணமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள். தினமும் 800 டன் குப்பைக்கழிவுகள் சேகரமாகின்றன. பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவது 40 ஆண்டு கால நடைமுறையாக இருந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்ததன் விளைவு: பாறைக்குழிகளை விடுத்து மாற்றுவழியைத் தேட வேண்டிய கட்டாயம் உருவானது. உள்ளூர் டீக்கடைகள் முதல் சட்டசபை வரை இப்பிரச்னை பல வடிவங்களில் விவாதப் பொருளானது.
இவற்றின் விளைவாக பல்வேறு நடவடிக்கைகள், மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இறைச்சி கழிவுகள் தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கடைகளில் சென்று பெறப்பட்டு அவை மாற்று வழியில் பயன்படுத்தப்படுகிறது. அதிக கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றிடமிருந்து நேரடியாக கழிவுகள் பிரிக்கப்பட்டு பெறப்படுகின்றன.
வீடுகளில் கழிவுகளை தரம் பிரித்து பெற்று உரிய வகையில் அவற்றை அழிக்கும் விதமான நடவடிக்கை, தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கோர்ட் வழிகாட்டுதலின் அடிப்படையில் இடுவாய் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது.
ரூ.2.17 கோடியில் பணிகள்
இதற்காக 60 லட்சம் ரூபாய் செலவில், பாதுகாப்பான ெஷட் அமைக்கப்படுகிறது. மேலும் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் எம்.சாண்ட் பரப்பி, குப்பை கழிவுகள் நிலத்தின் கீழ் இறங்காமல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை பணிக்கு நீர் வசதி ஏற்படுத்த 13 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்வெல் கிணறு, மோட்டார் மற்றும் தொட்டி அமைக்கப்படுகிறது. வளாகத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேறும் வகையில் 6 லட்சம் ரூபாய் வடிகால் கட்டப்படுகிறது. நீர் சேகரிப்பு தொட்டி 37 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. வளாகம் முழுவதும் இரண்டாவது மட்டத்தில் மண் பரப்பும் பணிக்கு 16 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அங்கு விளக்கு வசதி ஏற்படுத்த 11 லட்சம் ரூபாய்; அருகேயுள்ள பி.ஏ.பி., வாய்க்காலில் ஏதேனும் கழிவுகள் சென்று கலக்காமல் இருக்கும் வகையில் 12 லட்சம் ரூபாய் செலவில், இவ்வளாகத்தை கடந்து செல்லும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்படவுள்ளது. அவ்வகையில் ஏறத்தாழ 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.
குப்பை தரம் பிரிப்பு மையம்
மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் குப்பை தரம் பிரிப்பு மையம் தயார்படுத்தப்படுகிறது. கலவையான குப்பைகள் தரம் பிரிக்கும் கருவி கோவில்வழியில் சோதனை ஓட்டம் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
வார்டு பகுதிகளில் உள்ள நுண் உர உற்பத்தி மையங்கள் கூடுதல் கருவிகள் பொருத்தியும், சீரமைப்பு செய்தும், முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்ததன் விளைவு: பாறைக்குழிகளை விடுத்து மாற்றுவழியைத் தேட வேண்டிய கட்டாயம் உருவானது. உள்ளூர் டீக்கடைகள் முதல் சட்டசபை வரை இப்பிரச்னை பல வடிவங்களில் விவாதப் பொருளானது.

