/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அடுத்த தலைமுறை வாழ மண்ணைக் காப்பது நம் கடமை'
/
'அடுத்த தலைமுறை வாழ மண்ணைக் காப்பது நம் கடமை'
ADDED : பிப் 03, 2025 04:02 AM

பல்லடம் : பல்லடம் 'வனம்' அமைப்பின் வனாலயம் அடிகளார் அரங்கில், 'மண் பயனுற வேண்டும்' கருத்தரங்கம்; பழநி கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியனுக்கு பாராட்டு விழா ஆகியன நடந்தன. அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.
'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவேந்திரன் பேசியதாவது:
இயற்கை நமக்குத் தரும் ஆற்றலை அளந்து தருவதில்லை. நாம்தான் அவற்றை முறையாக பயன்படுத்துவதில்லை. இந்தியாவில், 85 சதவீத மழைநீர் வீணாக கடலில் தான் கலக்கிறது. விவசாய நிலங்களில் விழும் மழை நீர், அங்கேயே சேகரிக்கப்பட்டால், தண்ணீர் தட்டுப்பாடு என்பதே இருக்காது. மனிதர்களாகிய நாம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்து காட்ட முடியும்.
ரோடு விரிவாக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக பழமையான மரங்களை வெட்டுகின்றனர். வேறு இடத்துக்கு அவற்றை தாராளமாக மாற்றி வைக்கலாமே! இயற்கை சூழலை காக்க நினைத்தால் எதையும் செய்யலாம்.
விவசாயத்துக்கு உகந்த நிலங்களில், இந்தியா, 7ம் இடத்தில் இருந்த போதும், விவசாயம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், மண்வளம் கெட்டுள்ளதால், உற்பத்தி குறைவாக உள்ளது. அடுத்த தலைமுறைக்காக, அனைவரும் ஒன்றிணைந்து சில மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் காந்திராஜன், சோமனுார் சைசிங்ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மணிவேலுசாமி, திருப்பூர் சைசிங் தொழில் முனை வோர் சங்க பொறுப்பாளர் முருகேசன், இயற்கை விவசாயி கேத்தனுார் பழனிசாமி, ஈசா அறக்கட்டளை சார்பில் சுவாமி ஸ்ரீமுக்ஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழநி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
சமுதாய பணியாக முருகப்பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் மட்டுமே தனி மனிதனாக செய்ய முடியாது. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டு வருகிறேன். அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால் மட்டுமே செயல்கள் வெற்றி பெறும். தொண்டாற்றுவது என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். பழநி தைப்பூச விழா பிப்., 5 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். அறங்காவலர் குழு தலைவராகஇந்த விழாவுக்கு அனைவரையும் மனமார அழைக்கிறேன். எத்தனையோ பேர் முன்னோடிகளாக இருந்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். அவர்களை பின்பற்றி செயல்பட வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது.
இவ்வாறு, சுப்பிரமணியன் கூறினார்.

