/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு நிச்சயம்'
/
'பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு நிச்சயம்'
'பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு நிச்சயம்'
'பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு நிச்சயம்'
ADDED : ஆக 31, 2025 12:13 AM

திருப்பூர்: மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் திருப்பூர், தாராபுரம் ரோடு, விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குணசேகரன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 அமல்படுத்தப்பட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்தல், பெண்களை பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பது, பெண் ஊழியர்களின் உரிமைகளும், மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் வாயிலாக பெண்கள் பாதிக்கப்படும் போது சட்டரீதியான பாதுகாப்பும் தீர்வும் பெறலாம். நீதித்துறையில் மகளிர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் போன்றவையும், சட்ட உதவி மையங்களும் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பினை உறுதி செய்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
பாலின சமத்துவம் என்பது மக்கள் மனநிலையில் ஏற்பட வேண்டும். மக்களிடம் இயற்கையாகவே இந்த உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து நிறுவனங்களிலும் இச்சட்டத்தை நிலையாக அமல்படுத்துவதை அரசு உறுதி செய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள உற்பத்தி நிறுவனங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் பள்ளி,கல்லுாரி, மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த சேவை மையம் வாயிலாக தனியார் மற்றும் பொது இடங்கள், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிடும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. உடல் ரீதியாக, பாலின ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தீர்வு காணப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்,எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீ வித்யா, கூடுதல் நீதிபதி பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், பல்வேறு தலைப்புகளில் வக்கீல்கள் ஆதிலட்சுமி, தேன்மொழி, கோமதி, மெர்சி உட்பட பலர் பேசினர்.

